திருமணம் செய்து கொள்ள ஆசை.. நடிகையின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து ரகளை.. இளைஞர் அதிரடி கைது!
திருவனந்தபுரம்: தனது வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி புகுந்தது இதற்காகத்தான் என்று பிரபல நடிகை கூறியுள்ளார்.
பிரபல மலையாள நடிகை அஹானா கிருஷ்ணா. இவர் ராஜீவ் ரவி இயக்கிய ஞான் ஸ்டீவ் லோப்பஸ் படம் மூலம் நடிகை ஆனார்.
அடுத்து, லூக்கா, பதினெட்டாம் படி உட்பட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

அஹானா கிருஷ்ணா
இவரது தந்தை கிருஷ்ணகுமார் மலையாளத்தில் பிரபல நடிகர். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். அஹானா கிருஷ்ணாவின் வீடு, திருவனந்தபுரத்தில் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இரவு 10 மணியளவில் இவரது வீட்டுக்குள் அத்துமீறி இளைஞர் ஒருவர் நுழைந்தார்.

வீட்டுக்குள் புகுந்தார்
வாயில் கேட்டை தாண்டி குதித்து வீட்டுக்குள் புகுந்தார். வீட்டில் நடிகர் கிருஷ்ணகுமார், அவர் மனைவி, நடிகை அஹானா ஆகியோர் அப்போது வீட்டில் இருந்தனர். அந்த இளைஞர் வீட்டுக்குள் புகுந்ததை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கதவை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தனர்.

செல்போனில் பாடல்
உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் அந்த வாலிபர், கதவை தட்டினார். பின்னர் வராண்டாவில் அமர்ந்து செல்போனில் பாடலை ஒலிக்கவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்குள் போலீசார் அவரை வளைத்துப் பிடித்து விசாரித்தனர். அவர் மலப்புரத்தை சேர்ந்த பசல் உல் அக்பர் (27) என்பது தெரிய வந்தது.

குதிக்கும் வீடியோ
விசாரணைக்கு பின் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை அஹானா கிருஷ்ணா தன்னுடைய சமூகவலைதளத்தில், அந்த இளைஞர் ஆவேசமாக வீட்டுக்குள் குதிக்கும் வீடியோவை வெளியிட்டு கூறியிருப்பதாவது:

நுழைய முயன்றார்
நள்ளிரவில் அந்த வாலிபர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்தோம். உடனடியாகக் கதவை மூடியதால் பிரச்னை எதுவும் நடைபெறவில்லை.
கேட்டை தாண்டிக் குதித்து உள்ளே நுழைந்தவர், என் ரசிகர் என்றும், என்னைப் பார்க்க வந்ததாக முதலில் கூறினார்.

தாண்டி குதித்தார்
வாசல் கேட்டை திறக்க மறுத்ததால் அவர் தாண்டி குதித்தார். வீட்டுக்குள் நுழைய முயற்சித்தார். போலீசார் 15 நிமிடத்தில் வந்து அவரை கைது செய்தனர். உடனடியாக வந்த போலீசுக்கு நன்றி. போலீசிடம், அந்த நபர், என்னை திருமணம் செய்ய விரும்பி வீட்டுக்கு வந்ததாகக் கூறியுள்ளார்.

சர்ச்சையாக்க வேண்டாம்
இதுதான் நடந்தது. மற்றபடி எதுவும் நடக்கவில்லை. இதை மற்றவர்கள் சர்ச்சையாக்க வேண்டாம். இதைப் பெரிதுபடுத்தவோ, அரசியலாக்கவோ, மதத்துடன் தொடர்புபடுத்தவோ வேண்டாம். இவ்வாறு நடிகை அஹானா கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார். கூடவே, இந்த சம்பவம் தனக்குப் பெரும் பயத்தை தந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications