Padai Thalaivan Box Office - விஜயகாந்த் மகனுக்கு இந்த நிலைமையா?.. வசூலில் படை தலைவன் பம்மிட்டாரே
சென்னை: விஜயகாந்த்தின் மகனான சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. பல வருடங்கள் கழித்து அவர் நடித்திருந்த இந்தப் படம் அவருக்கு வெற்றியை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்நிலையில் படம் வெளியான இரண்டாவது நாளான நேற்று வசூலில் பயங்கரமான அடி வாங்கியிருக்கிறது அந்தப் படம்.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவராக திகழ்ந்தவர் விஜயகாந்த். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் அரசியலிலும் தனது தடத்தை ஆழமாக பதித்தவர். தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராக இருந்த அவர்; ஒருகட்டத்தில் அரசியலில் வீழ்த்தப்பட்டார். சூழல் இப்படி இருக்க உடல்நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட விஜயகாந்த் கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
விஜயகாந்த்தின் மகன்கள்: இதற்கிடையே விஜயகாந்த்துக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் விஜய பிரபாகரன் அரசியலில் குதித்திருக்கிறார். சண்முக பாண்டியனோ சகாப்தம் என்ற படத்தின் மூலம் கடந்த 2015ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனையடுத்து அவர் நடித்த மதுர வீரன் படமும் தோல்வியைத்தான் சந்தித்தது.

படை தலைவன்: தனது தந்தை போலவே எப்படியாவது பெரிய ஹீரோவாக வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் அவருக்கு இருக்கிறது. விஜயகாந்த் உயிரிழந்த சூழலில் சண்முக பாண்டியனுக்கு விஜய் உள்ளிட்ட ஹீரோக்கள் தங்களது படங்களில் நடிக்க வாய்ப்பு தர வேண்டும்; அல்லது அவர் நடிக்கும் படம் ஒன்றில் விஜய் கெஸ்ட் ரோலாவது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் படை தலைவன் படத்தில் நடிக்க கமிட்டானார் சண்முக பாண்டியன்.
எப்படி இருக்கு படம்?: இப்படத்தை அன்பு என்பவர் இயக்கியிருக்கிறார். விஜயகாந்த் மகனுடன் கஸ்தூரி ராஜா, யாமினி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நேற்று முன் தினம் படம் வெளியானது. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அவரது மகன் நடித்திருக்கும் படம் என்பதால் மிகப்பெரிய ஆர்வத்தோடு படம் பார்க்க ரசிகர்கள் சென்றார்கள். படத்தில் சில காட்சிகள் மட்டுமே நன்றாக இருந்ததாகவும்; சண்முக பாண்டியனின் நடிப்பு கவர்ந்தாலும் இன்னும் அவர் தனது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தை கொடுத்தார்கள்.
வசூலில் செம அடி: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் மொரட்டு அடி வாங்கியிருக்கிறது. படம் வெளியான முதல் நாளில் ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய் வசூலித்தது. இரண்டாவது நாளான நேற்று சனிக்கிழமை என்பதால் கண்டிப்பாக தியேட்டருக்கு கூட்டம் வந்து வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றும் பாக்ஸ் ஆஃபிஸில் படம் அடி வாங்கியிருக்கிறது. அதன்படி இரண்டாவது நாளில் அப்படம் 89 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்திருக்கிறது என Sacnilk வலைதளம் குறிப்பிட்டிருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்களோ விஜயகாந்த் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
கொம்பு சீவி: இதற்கிடையே வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் சண்முக பாண்டியன். அதன் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது. விரைவில் அப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படமாவது விஜயகாந்த்தின் மகனுக்கு வளமான எதிர்காலத்தை திரைத்துறையில் கொடுக்க வேண்டும் என்று கேப்டனின் ரசிகர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











