விராட் கோலி மாதிரிதான் பிரபாஸ்.. ஒன்னுமே செய்யல.. கல்கி படத்தை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: பிரபாஸ் நடித்திருக்கும் கல்கி 2898 ஏடி படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பிரபாஸுடன் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. புராண கதையை தற்காலத்துக்கு ஏற்றவாறு இயக்குநர் நாக் அஸ்வின் மாற்றியிருப்பதாக ரசிகர்கள் கூறிவரும் சுழலில்; பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கல்கி படத்தை கலாய்த்திருக்கிறார்.
பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட பிரபாஸ் இப்போது கல்கி 2898 ஏடி படத்தில் நடித்திருக்கிறார். நாக் அஸ்வின் இயக்கியிருக்கும் இந்தப் படம் பல பாகங்களாக உருவாகியிருக்கிறது. இதில் பிரபாஸுடன் கமல், அமிதாப், தீபிகா என நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாலும்; பான் இந்தியா ஸ்டார்கள் இருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு படத்தின் ஷூட்டிங் தொடங்கியதிலிருந்தே எகிறித்தான் இருந்தது.

ரிலீஸான கல்கி: கண்டிப்பாக இந்தப் படம் பாகுபலி படத்தின் சாதனையை முறியடிக்கும் என்றும்; பிரபாஸை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்றும் அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். ஏனெனில் இந்திய அளவில் ஒரு தெலுங்கு படம் முதன்முறையாக மெகா ஹிட்டடித்தது என்றால் அது பாகுபலிதான். அதனை பிரபாஸே மீண்டும் முறியடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பேசிக்கொண்டனர். சூழல் இப்படி இருக்க படமானது நேற்று திரையரங்குகளில் வெளியானது.
பாசிட்டிவ் விமர்சனம்: படத்தின் ஒன்லைன் என்று எடுத்துக்கொண்டால், மகாபாரத கதையின் கருதான். படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். அதுமட்டுமின்றி நாக் அஸ்வினின் மேக்கிங், கிராஃபிக்ஸ் காட்சிகள், கமல், அமிதாப் ஆகியோரின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும்; இடைவேளை காட்சி கூஸ் பம்ப்ஸாக இருக்கிறது போன்ற கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
வசூல் சாதனை: விமர்சன ரீதியாக பெரும்பாலும் பாசிட்டிவ் ரிசல்ட்டை பார்த்த கல்கி; வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டிருக்கிறதாம். அதன்படி ரிலீஸான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் அந்தப் படம் 115 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 65 கோடி ரூபாயும் என மொத்தம் முதல் நாளில் 200 கோடி ரூபாய்வரை வசூலை அள்ளியிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பிரபாஸும் அவரது ரசிகர்களும் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் கல்கி படம் பற்றி விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "மகாபாரத கதையின் கருவை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் 800 வருடங்கள் கழித்து நடந்தால் எப்படி இருக்கும் என்ற இயக்குநரின் கற்பனைதான் கல்கி 2898 ஏடி திரைப்படம். ப்ளாக் அண்ட் ஒயிட் கால மக்களை பற்றி சொல்ல வேண்டுமென்றாலே அவ்வளவு உழைப்பு தேவைப்படும். இவர்கள் 800 ஆண்டுகள் கழித்து என்று சொல்கிறார்கள் எனில் எவ்வளவு உழைப்பு இருக்க வேண்டும்.
ஒன்றும் இல்லை: ஆனால் அந்த உழைப்பு ஒன்றுமே இல்லை. இயக்குநர் கற்பனை செய்யும் உலகத்துக்குள் ரசிகர்களை இன்வால்வ் ஆக்க வேண்டும். ஆனால் ரசிகர்கள் இதில் இன்வால்வ் ஆகவில்லை. தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார் என்பதால் இந்தப் படத்தை எடுத்திருபார் போல. பிரபாஸோ ஒரு இரும்பு குடோனுக்குள்தான் உட்கார்ந்திருக்கிறார். 800 ஆண்டுகள் கழித்தும் விராட் கோலி போல் தாடியை வைத்துக்கொண்டுதான் இருப்பார் போல பிரபாஸ். அவர் படத்தில் ஒன்றுமே செய்யவில்லை. அந்த இரும்பு குடோனை விட்டு அவர் கிளம்புவதற்கே இரண்டாம் பாதி ஆகிவிடுகிறது.
படத்துக்கு ஒரு வில்லன் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இதில் காண்பிக்கப்படும் வில்லனோ படுத்த படுக்கையாக இருக்கிறார். ஹீரோவும், வில்லனும் சந்தித்துக்கொள்வார்கள் என்று பார்த்தால்; அதுவும் நடக்கவில்லை. கேட்டால் இரண்டாம் பாகத்தில் இருக்கும் என்பார்கள். ஒன்று சொல்லிக்கொள்கிறோம் நடந்தது நடந்து போச்சு இத்தோடு முடிச்சுக்குவோம். இரண்டா பாகம் எல்லாம் வேண்டாம்" என்று கூறியிருக்கிறார் ப்ளூ சட்டை.


Click it and Unblock the Notifications











