வேட்டையன் படத்தின் ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன?.. அரசுக்கே சொல்லும் பாடம்.. பிரபலம் சொன்ன செம விமர்சனம்
சென்னை: த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கிறது வேட்டையன் திரைப்படம். இதில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்க லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஆரவாரத்துடன் படம் பார்க்க சென்ற ரசிகர்கள் முழு திருப்தியுடன் வந்தார்கள். இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு வேட்டையன் படத்தின் விமர்சனத்தை கூறியிருக்கிறார்.
கூட்டத்தில் ஒருவன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கியவர் த.செ.ஞானவேல். அடிப்படையில் பத்திரிகையாளரான அவர் ஜெய் பீம் படத்தின் மூலம் பெரிதும் அடையாளப்பட்டார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் யாரை இயக்குவார் என்று உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ஸ்வீட் சர்ப்ரைஸாக ரஜினியுடன் இணைந்தார். லைகா நிறுவனம் தயாரிப்பில் வேட்டையன் படத்தை இயக்கியிருக்கிறார். அதில் ரஜினியுடன் அமிதாப், ஃபகத், ராணா, துஷாரா, ரித்திகா, அபிராமி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

இன்று ரிலீஸ்: மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் இன்று வெளியானது. சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்ததை அடுத்து கூடுதல் உற்சாகத்தோடு ரசிகர்கள் இருந்தார்கள். படத்தின் ப்ரீ டிக்கெட் புக்கிங்கிலும் படம் மிகப்பெரிய சாதனையை செய்தது படம். ஆரம்பமே அதகளமாக இருப்பதால் கண்டிப்பாக படத்தின் கண்டெண்ட்டும் மாஸாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு படம் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றார்கள்.
செம ரெஸ்பான்ஸ்: அந்த எதிர்பார்ப்பை ஞானவேல் ஏமாற்றவில்லை. சமூகத்துக்கு தேவையான விஷயத்தையும், ரஜினியின் ரசிகர்களுக்கு தேவையான விஷயத்தையும் கலந்து ஒரு பக்கா படத்தை கொடுத்துவிட்டார் இயக்குநர் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் ரஜினி கடைசியாக ஹீரோவாக நடித்த ஜெயிலர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தவகையில் வேட்டையனும் மெகா ஹிட்டாகிவிடும். வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
செய்யாறு பாலு விமர்சனம்: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு தனது யூட்யூப் சேனலில் வேட்டையன் பட விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். அந்த வீடியோவில், "ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் வேட்டையன் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. இந்தப் படத்தில் வேறு ஒரு ரஜினியை ஞானவேல் கொண்டு வந்திருக்கிறார். சமூக நீதியை ரஜினியை வைத்து சொல்லிவிட்டு அவரது ரசிகர்களுக்கும் ஒரு கொண்டாட்டமான படத்தை கொடுத்திருக்கிறார்.
படத்தின் ப்ளஸ்: ரஜினிகாந்த் இதில் அவ்வளவு அருமையாக நடித்திருக்கிறார். வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கிறார். அதேபோல் ஃபகத் பாசில் அசால்ட்டாக நடித்திருக்கிறார். அவரை இந்தக் கேரக்டருக்கு ஞானவேல் தேர்ந்தெடுத்தது நல்ல விஷயம். ரித்திகா சிங், துஷாரா, அபிராமி, ரோகிணி என அனைவருக்குமே இயக்குநர் ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார். பாலிவுட் பிக் பாஸ் அமிதாப் பச்சன் அமைதியாக நடித்துவிட்டு சென்றுவிடுகிறார். என் கவுண்ட்டருக்கு எதிரான கதை என்று மட்டும் இதை எடுத்துக்கொள்ள முடியாது. கல்வியில் நடக்கும் ஊழலையும் இதில் அருமையாக பேசியிருக்கிறார் இயக்குநர். இது அரசுக்கே சொல்லும் பாடமாக இருக்கும். படத்தின் மிகப்பெரிய இன்னொரு ப்ளஸ் அனிருத். ரஜினிகாந்த் வரும் இடத்தில் எல்லாம் அவருக்கென்று ஸ்பெஷலாக ரீ ரெக்கார்டிங் செய்திருக்கிறார். இந்தப் படத்தை மேலும் அவர் உயரத்துக்கு கொண்டு போயிருக்கிறார்.
படத்தின் மைனஸ்: படத்தில் மைனஸே இல்லையா என்று கேட்டால் இருக்கிறதுதான். முதல் பாதி விறுவிறுவென்று செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது.அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அதேபோல் படத்துக்கு வில்லன் கேரக்டர் ரொம்பவே முக்கியம். இதில் ராணா வில்லன். நன்றாக அவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருந்தாலும்; ரஜினிக்கு வில்லன் என்றால் இன்னும் கொஞ்சம் அவர் நடிப்பில் மெனக்கெட்டிருக்கலாம். மேலும் அமிதாப் பச்சனுக்கும் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கலாம். அதை ஏன் ஞானவேல் செய்யவில்லை என்று தெரியவில்லை. மற்றபடி படம் அருமையாக இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











