சூறாவளியான சூரி.. இரண்டாம் நாள் கருடன் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?.. மாஸ் காண்பிக்கிறாரே
சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர். காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார். அவர் கதை நாயகனாக விடுதலை படத்தில் முதன்முதலாக நடித்தார். வெற்றிமாறன் இயக்கியிருந்த அந்தப் படம் சூரிக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தது. இப்போது அவரது நடிப்பில் கருடன் வெளியாகி சக்கைப்போடு போட்டுவருகிறது.
செட் அசிஸ்டெண்ட், ஆர்ட் அசிஸ்டெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என கிடைத்த வேலைகளை எல்லாம் சினிமாவில் இழுத்துப்போட்டு செய்தார் சூரி. சங்கமம் படத்தின் ஒரு பாடலில் புலி வேஷம் கட்டி மணிவண்ணனோடு ஆடும் சிறுவர்களுக்கு புலி போல் வேஷம் போட்டுவிட்டதுகூட சூரிதான். மேலும் அந்தப் பாடலில் சில நொடிகள் திரையிலும் தோன்றுவார் சூரி. இப்படி தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் தலை காட்டியுள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

புரோட்டா சூரி: சினிமாவை நம்பி உண்மையாக உழைத்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என்பதுதான் விதி. அந்த சினிமா சூரியையும் கைவிடவில்லை. பல வருட நடிப்பு பசியில் கிடந்தவருக்கு சுசீந்திரன் புரோட்டா மூலம் சூரியின் பசியை ஆற்றினார். 50 புரோட்டாக்களை உண்ணும் காட்சியில் சூரி அதகளம் செய்ய, வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அந்த சீன் அடையாளம் ஆனது. கூடவே சூரியும் அடையாளப்பட்டார்.
விடுதலை சூரி: காமெடி நடிகராக வலம் வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் வெளியான அந்தப் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; அவர் வெறும் காமெடி ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டனர். ஆக்ஷன் காட்சிகளில் அசால்ட்டாக ரிஸ்க் எடுத்திருந்த சூரிக்கு விடுதலை அடுத்த அடையாளமாக மாறியிருக்கிறது.
கருடன்: இப்போது அவரது நடிப்பில் கருடன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. துரை செந்தில்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் சசிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். நேற்று முன் தினம் வெளியான இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. முக்கியமாக சூரியின் நடிப்பு மிரள செய்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி இத்தனை வருட உழைப்புக்கு சூரிக்கு இப்போதுதான் தீனி கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. கண்டிப்பாக இனி அவரது வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும் என்று வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.
பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: கருடன் படத்துக்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துவருகின்றன. விமர்சன ரீதியாகவும் கலெக்ஷன் ரீதியாகவும் சக்கைப்போடு போடுகிறது. முதல் நாள் மூன்று கோடி ரூபாயை வசூலித்து கெத்து காண்பித்தது கருடன். இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று படம் செய்த வசூல் குறித்து தெரியவந்திருக்கிறது. அதன்படி நேற்று மட்டும் 4.65 கோடி ரூபாயை படம் வசூலித்திருப்பதாகவும், இன்றும் விடுமுறை நாள் என்பதால் கண்டிப்பாக இன்றைய வசூலும் அதிகரிக்கும் என்றும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications











