கமல் நடித்தும் பயனில்லை?.. பிரபாஸின் கல்கி படத்துக்கு சிவகார்த்திகேயன் உதவி?.. இது புது பஞ்சாயத்து
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் ஃபேமஸ் ஹீரோக்களில் ஒருவர் பிரபாஸ். பாகுபலி மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட அவர் இப்போது பான் இந்தியா ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இப்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் விரைவில் வெளியாகவிருக்கும் சூழலில் அந்தப் படம் குறித்து இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தெலுங்கில் மட்டும் அறியப்பட்ட பிரபாஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக வலம் வர ஆரம்பித்த அவர் கடைசியாக ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். பாகுபலி போல் நிச்சயம் இந்தப் படமும் தனக்கான அடையாளமாக மாறும் என்ற பெரும் நம்பிக்கையில் அவர் இருந்தார்.

மொக்கை வாங்கிய ஆதி புருஷ்: ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு எதிர்மறையாக ரிசல்ட் இருந்தது. ஆதிபுருஷை ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இதனால் படம் மோசமான தோல்வியை தழுவியது. இதனையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்திருக்கிறார். கேஜிஎஃப் எப்படி மாஸ் ஹிட்டானதோ அதேபோல் இந்தப் படமும் ஹிட்டாகி மீண்டும் இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்த்திருக்கிறார் பிரபாஸ். சலார் படம் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கல்கி 2898 ஏடி: இந்தச் சூழலில் அமெரிக்காவின் சான் டியாகோவில் நடந்த காமிக் கான் நிகழ்ச்சியில் படத்தின் பெயர் கல்கி 2898 ஏடி என அறிவிக்கப்பட்டு க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது. முதலில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது கடுமையாக ட்ரோல் செய்த ரசிகர்கள் க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்து நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
நட்சத்திர பட்டாளம்: இப்படம் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு உருவாகியிருக்கிறது. நாக் அஸ்வின் படத்தை இயக்க; பிரபாஸுடன் கமல் ஹாசன், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சான், திஷா பதானி என பலர் நடித்திருக்கின்றனர். ஜூன் 27ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது. சமீபத்தில்தான் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அந்த ட்ரெய்லருக்கு ரசிகர்கள் தங்களது உச்சக்கட்ட வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் உதவி: இந்நிலையில் கல்கி படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, கமல் ஹாசன் இந்தப் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருப்பதால் இந்தப் படத்தின் விநியோகம் தமிழ்நாட்டில் சிறப்பாக இருக்கும் என்று கணக்கு போட்டிருந்ததாம் படத்தின் தயாரிப்பு தரப்பு. ஆனால் கல்கி படத்தை யாரும் வாங்குவதற்கு விருப்பமில்லையாம்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைகொடுக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த படக்குழுவுக்கு அந்த நிறுவனமும் கையை விரித்துவிட்டதாகவும்; ஒருவழியாக தயாரிப்பாளர் திருப்பதி பிரசாத் இந்தப் படத்தை 20 கோடி ரூபாய் வாங்கியிருக்கிறாராம். அதுமட்டுமின்றி அவரும் இந்தப் படத்தை விநியோகம் செய்ய படாதபாடு பட்டுவிட்டாராம்.
ஒருவழியாக கல்கி படத்தை வாங்கினால் தான் தயாரிக்கும் சிவகார்த்திகேயன் - முருகதாஸின் படத்தையும் தருவேன் என்று உறுதி செய்த பிறகு கல்கி படத்தின் நல்ல விலைக்கு விநியோகம் ஆனதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், அட கமல் ஹாசன் நடித்தும் பெரிதாக விலை போகாத ஒரு பான் இந்தியா படம் சிவகார்த்திகேயன் படத்தை வைத்து விலை போயிருக்கிறதே. பிரபாஸுக்கு சிவகார்த்திகேயன் உதவியிருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











