மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் இணையும் படத்தின் நிலை என்ன தெரியுமா?.. வெளியான புதிய தகவல்
சென்னை: மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். இதுவரை மொத்தமே மூன்று படங்கள்தான் இயக்கியிருக்கிறார். ஆனால் அந்த மூன்று படங்களுமே சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவரது இயக்கத்தில் வாழை படம் ரிலீஸாகிறது. இதற்கிடையே துருவ் விக்ரமுடன் அவர் ஒரு படத்தில் இணைந்திருக்கிறார்.
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பல வருடங்கள் இருந்துவிட்டு பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் அப்படம் அப்பட்டமாக பேசியிருந்தது. இதற்கிடையே மாரி செல்வராஜ் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

கவனம் ஈர்த்த மாரி: படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே மாரி செல்வராஜ் தான் எவ்வளவு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், சென்சிட்டிவ் விஷயத்தை தொட்டு அதை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார் என்றும் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக அந்தப் படம் முடியும்போது அவர் வைத்த க்ளைமேக்ஸ் ஷாட் படம் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாரி செல்வராஜ் மீது பலரது கவனத்தை திருப்பியது. பாரதிராஜாவே அந்த ஷாட்டை பாராட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.
கர்ணன் மாரி: முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தி இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. அப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இருப்பினும் இரண்டு படங்களிலேயே மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநராகிவிட்டார்.
மாமன்னன்: இப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார். வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த ஜூன் மாதம் படம் ரிலீஸானது. படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை படம் ரிலீஸாகவிருக்கிறது. அப்படம் முழுக்க முழுக்க சிறுவர்களை வைத்து உருவாக்கப்பட்டிருப்பது. முதலில் ஹாட் ஸ்டாரில் ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்ட சூழலில்; பிறகு தியேட்டரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
துருவ் விக்ரமுடன் இணையும் படம்: இதற்கிடையே அவர் துருவ் விக்ரமுடன் ஒரு படத்தில் இணைந்தார். கபடி வீரர் மண்ணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறுதான் படமாக உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்துக்காக துருவ் விக்ரம் கபடி பயிற்சியில் தீவிரமாக இருந்தார். மாமன்னன் படம் ஆரம்பிக்கப்பட்டதால் துருவ் விக்ரமுடனான படம் தாமதம் ஆகியது. அதனையடுத்து வாழை படத்தை இயக்குவதற்கும் மாரி செல்வராஜ் சென்றுவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
படத்தின் நிலவரம்: வாழை படம் இயக்க சென்றுவிட்டதால் துருவ் விக்ரமுடன் இணையும் படம் ட்ராப் ஆகிவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டிருப்பதாகவும் படமானது மே மாதத்தில் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது. நிச்சயம் இந்தப் படம் தனக்கு பெரும் பிரேக்கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் துருவ் விக்ரம்.


Click it and Unblock the Notifications











