Thangalaan Box Office - வசூலில் ஜொலிக்கும் தங்கலான்.. நான்காவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்கலான் ரிலீஸானது. பா.இரஞ்சித்தும், விக்ரமும் முதன்முறையாக இணைந்ததன் காரணமாக படம் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு சென்றனர். விமர்சன ரீதியாக ரசிகர்களில் ஒருதரப்பினர் அப்படி இப்படி பேசினாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பிவருகிறது. இந்தச் சூழலில் நான்காவது நாளான நேற்று படம் செய்த வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத விக்ரம் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தார். சூழல் இப்படி இருக்க பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார் விக்ரம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. இதனால் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

இரட்டை குதிரையில் சவாரி: சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவாகியிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு பக்கம் காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும், மறுபக்கம் ஜெமினி, தூள், தில் என கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்களில் நடித்து இரட்டை குதிரையில் லாவகமாக பயணித்தார். இதனால் கரியரின் உச்சத்திற்கு சென்று இப்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.
தங்கலான்: சூழல் இப்படி இருக்க பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் விக்ரம் நடிக்க கமிட்டானார். தற்கால தலைமுறை இயக்குநர்களில் பா.இரஞ்சித் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். அவருடன் சியான் விக்ரம் முதன்முறையாக இணைந்ததன் காரணமாக இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. முக்கியமாக இந்தப் படம் கண்டிப்பாக ஹிட்டடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள்.
கலவையான விமர்சனங்கள்: விக்ரமுடன் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் ரிலீஸானது. படத்தை பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தனர். அதேசமயம் ரசிகர்களில் ஒருதரப்பினரோ படம் கொஞ்சம் புரியவில்லை; இன்னும் தெளிவாக பா.இரஞ்சித் படத்தை கொண்டு சென்றிருக்கலாம் என்று கூறினர். இப்படி கலவையான விமர்சனங்களை படம் பெற்றாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டுவருகிறது.
நான்காவது நாள் வசூல்: படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே உலக அளவில் 53.64 கோடி ரூபாயை வசூலித்து கெத்து காட்டியது. இந்நிலையில் நான்காவது நாளான நேற்று படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நேற்று தங்கலான் படம் 5.60 கோடி ரூபாய்வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய்வரை தங்கலான் வசூலித்திருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.மொத்தத்தில் இந்தப் படம் நன்றாக போய்க்கொண்டிருப்பதால் சியான் விக்ரம் மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications