பாக்ஸ் ஆஃபிஸில் செமயாக வாழும் வாழை.. மாரி செல்வராஜ் கலக்குறாரே.. எவ்வளவு வசூல் தெரியுமா?
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் தேதி வெளியான படம் வாழை. நிகிலா விமல், கலையரசன் உள்ளிட்டோரும், மாரி செல்வராஜின் ஊரை சேர்ந்த சிறுவர்களும் நடித்த வாழை பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு வரும் படத்தை பலரும் கொண்டாடிவருகிறார்கள். இந்தச் சூழலில் வாழை படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் தேதி வாழை படம் வெளியானது. தனது சிறு வயதில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த வலியான நிகழ்வுகளை திரைக்கதையாக்கி ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். படிக்கும் சிறுவர்கள் படித்துக்கொண்டே வேலைக்கு செல்வதையும், வாழை தார் சுமப்பதில் உள்ள வலியையும், ஒரு ரூபாய் கூலி உயர்த்தி கேட்டதற்கு அதிகாரவர்க்கத்தை சேர்ந்தவர் செய்யும் அலட்சியமும் என யாரும் பேசாத வாழ்வியலை துணிந்து பேசியிருக்கிறா மாரி செல்வராஜ்.

மிரண்டுபோன பாலா: வாழை ரிலீஸுக்கு முன்னதாகவே அதன் ப்ரிவ்யூ ஷோவை பார்த்த செலிபிரிட்டிகள் கலங்கிப்போனார்கள். முக்கியமாக இயக்குநர் பாலா வாழை படத்தை பார்த்துவிட்டு ஒரு வார்த்தைக்கூட பேசாமல் மாரி செல்வராஜின் கைகளை பிடித்து தலையை குனிந்தபடி அமர்ந்திருந்த வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் எப்போதும் பாலாவின் படங்களை பார்த்து முடித்த பிறகு ரசிகர்கள் சோகத்தின் உச்சத்தில் இருப்பார்கள். எனவே பாலா அப்படி அமர்ந்திருந்ததை பார்த்து அப்படி என்ன படத்தில் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
கலங்கிப்போன ரசிகர்கள்: அந்த எதிர்பார்ப்போடு திரையரங்குகளுக்கு படம் பார்க்க சென்றார்கள் ரசிகர்கள். அவர் எதிர்பார்த்தபடிதான் படம் இருந்தது. சோகமான முடிவுதான் என்று முன்னரே தெரிந்திருந்தாலும்; படத்தில் பெரும்பாலான காட்சிகள் கலகலப்பாக போய்க்கொண்டிருந்ததை வெகுவாகவே ரசித்தார்கள் ரசிகர்கள். அதனையடுத்து படத்தின் கடைசி 30 நிமிடங்களில் ரசிகர்களை சீட்டிலேயே உறைய வைத்துவிட்டார் மாரி செல்வராஜ். படம் முடிந்து வெளியே வந்தவர்கள் ஒரு துக்க மனநிலையுடனே வந்தார்கள்.
கலக்கிய சிறுவர்கள்: படத்தின் இரண்டு தூண்கள் என்றால் சிவனணைந்தான் பெருமாள் (பொன்வேல்), சேகர் (ராகுல்). இவர்கள் இருவருக்கும் இதுவே முதல் படம். ஆனால் அதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் தங்களது நடிப்பில் கலக்கிவிட்டார்கள். அதேபோல் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் என ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததாலும், மாரியின் மேக்கிங்காலும் படம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டது.
வசூல் நிலவரம்: இப்படி விமர்சன ரீதியாக பட்டையை கிளப்பிய வாழை வசூல் ரீதியாகவும் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. முதல் நாளில் இருந்தே வாழை வசூலில் முன்னணியில் இருந்தது. இந்தச் சூழலில் முதல் நாளில் 1.15 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 2.5 கோடி ரூபாயும் வசூலித்த வாழை மூன்றாவது நாளான நேற்று 4.4 கோடி ரூபாய் வசூலித்ததாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் இதுவரை படமானது 8.11 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











