மொழி கடந்து நடிக்கும் யோகிபாபுவுக்கு பிறந்தநாள்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. செம வாழ்க்கை
சென்னை: நடிகர் யோகி பாபு தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். லொள்ளு சபாவில் தலை காட்டி பிறகு சினிமாவுக்குள் வந்து காமெடி நடிகராக வலம் வந்த அவர் இப்போது ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஹீரோவாக மாறினாலும் காமெடி ரோல்களையும் விடாமல் செய்துவருகிறார். இந்தச் சூழலில் யோகிபாபு இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இதனையொட்டி அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து இருக்கிறார் யோகிபாபு. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பின்னர் வெள்ளி திரைக்கு வந்தவர். வெள்ளித்திரைக்கு வந்த புதிதில் அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு வழியாக யாமிருக்க பயமேன் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டது. அதே சமயம் அந்தப் படத்தில் யோகிபாபுவை அளவுக்கு அதிகமாகவே உருவகேலி செய்துவிட்டார்கள் என்ற விமர்சனமும் எழுந்தது

தொடர் வாய்ப்புகள்: அந்தப் படத்திற்குப் பிறகு யோகிபாபுவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டவர் தனது டைமிங் காமெடிகளாலும் கவுண்ட்டர்களாலும் ரசிகர்களை வெகுவாகவே சிரிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் வடிவேலு ஒதுங்க, விவேக் இறந்து போக, சந்தானம் ஹீரோவாக மாற என காமெடிக்கென வெற்றிடம் உருவானது. அதனை யோகிபாபு நிரப்பினார்.
ஹீரோ: காமெடியன்கள் ஹீரோவாகும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகிவருகிறது. அதற்கு ஏற்றார் போல் நடிகர் யோகிபாபுவும் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்திலும் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மாவீரன், ஜெயிலர்: அதனை தொடர்ந்து அவர் நடித்த கூர்கா உள்ளிட்ட படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. ஹீரோவாக நடித்தாலும் காமெடி ரோலிலும் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்த வகையில் கடைசியாக அவர் ரத்னம் மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஹீரோவாக நடித்தாலும் காமெடிக்கு யோகிபாபுவை இயக்குநர்கள் தேடத்தான் செய்கிறார்கள் என்பதை அந்தப் படங்கள் உணர்த்தின.
சூப்பர் பாபு: ஒருபக்கம் ஹீரோவாக இருந்தாலும் காமெடியனாகவும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். பொதுவாக ஹீரோ ஆசை வந்துவிட்டால் காமெடியை மறந்துவிடுவார்கள்; அப்படி இல்லையென்றால் அவர்கள் செய்யும் காமெடி சிரிப்பு வரவைக்காது என்ற கருத்து உண்டு. ஆனால் யோகிபாபுவோ மாவீரன், ஜெயிலர், ரத்னம், அரண்மனை 4 ஆகிய படங்களில் ரசிகர்களை தனது காமெடியால் சிரிக்கவே வைத்தார் என்பது கவனிக்கத்தக்கது. தமிழ் மட்டுமின்ரி ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்கிறார். கடைசியாக மலையாளத்தில் அவர் குருவாயூர் அம்பல நடையில் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு: இந்நிலையில் இன்று அவர் தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்துவரும் சூழலில் யோகிபாபுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு படம் என்றால் ஒரு கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறும் யோகிபாபு; நாள் கணக்கு என்றால் ஒரு நாளைக்கு 10 லட்சம்வரை வாங்குவதாக சொல்லப்படுகிறது. சென்னையில் பிரமாண்டமாக வீடு கட்டியிருக்கும் அவருக்கு மொத்தம் 40லிருந்து 50 கோடி ரூபாய்வரை மொத்த சொத்து மதிப்பு இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











