ரஜினி மெடிக்கல் ஹிஸ்டரி தெரியுமா?..இவ்வளவு முறை அட்மிட்டா?..யானை இல்லை குதிரை டக்குனு எழுந்திடுவாரு
சென்னை: வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினி அடுத்ததாக கூலி படத்தில் நடித்துவருகிறார். 73 வயதாகும் அவர் இப்போதும் சுறுசுறுப்பாக நடித்துவருவதை பார்த்து இளம் நடிகர்கள் ஆச்சரியம்தான் படுகிறார்கள். சூழல் இப்படி இருக்க திடீரென அவர் அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்படவிருக்கின்றன. மேலும் ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்று ரஜினிக்காக எழுதப்பட்ட பாடல் வரி எத்தனை காலத்துக்கும் அவருக்கு பொருந்தும். எளிமை, சுறுசுறுப்பு என 73 வயதிலும் இளைஞர் போல் இயங்கிக்கொண்டிருக்கிறார். ஞானவேல் இயக்கத்தில் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நிச்சயம் இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

வேட்டையன் ரிலீஸ்: அதேபோல் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ரஜினியுடன் அமிதாப், ஃபகத் உள்ளிட்டோர் நடித்திருப்பதாலும்; ஞானவேல் இயக்கம் என்பதாலும் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்புகள் நிலவிவருகின்றன. டீசர் அப்படி இப்படியான விமர்சனத்தை சந்தித்தாலும் நாளை வெளியாகும் ட்ரெய்லர் ரசிகர்களை திருப்திப்படுத்திவிடும் என்று திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இந்தச் சூழலில் ரஜினிகாந்த் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நிலவரம் இப்படி இருக்க கடந்த காலங்களில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை திரும்பி பார்க்கலாம்.

சிங்கப்பூர் சென்ற ரஜினி: கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ராணா என்ற படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினி. பூஜை எல்லாம் போடப்பட்டு ஷூட்டிங்கிற்கும் தயாரானார்கள். அந்த சமயத்தில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை சீராகாததால் கடந்த 2011ஆம் ஆண்டு சென்னையிலிருந்து சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும் சோகத்தின் உச்சத்துக்கே சென்றனர்.

ரஜினி, தான் நலமுடன் திரும்பி வந்துவிடுவேன் என்று வாய்ஸ் நோட் அனுப்பியிருந்தார். சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு சிறுநீரக கோளாறுக்கான சிகிச்சையும், பிற உடல்நல கோளாறுகளுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அதிலிருந்து மீண்ட அவர் இந்தியாவுக்கு திரும்பி மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் இது தன்னுடைய இரண்டாவது பிறவி என்று அவரே சொல்லியிருக்கவும் செய்கிறார்.
அமெரிக்கா செல்லும் ரஜினி: சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்த அவர் மீண்டும் பிஸியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் என்ன ஒன்று பெரும் ரிஸ்க் எடுத்து நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார். தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவுக்கு சென்றுவருகிறார். அங்கிருக்கும் மயோ மருத்துவமனையில் அவருக்கு வழக்கமான உடல்நல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. வருடத்துக்கு ஒருமுறையாவது அவர் அங்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அவருடன் பெரும்பாலும் மூத்த மகள் ஐஸ்வர்யாவே செல்கிறார். இதற்கிடையே தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு விவகாரம் ரஜினிக்கு உடல்நல குறைவோடு மன அழுத்தமும் ஏற்பட ஒரு காரணம் என்று முணுமுணுக்கப்படுகிறது. அதேபோல் அரசியலுக்கு வருவதாக இருந்த ரஜினிகாந்த் தனது உடல்நிலையில் அக்கறை தேவை என்று மருத்துவர்கள் எச்சரித்ததால் அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது அப்பல்லோவில்: ரஜினிக்கு இப்போது அவரது வயதுக்குரிய சில பிரச்னைகள் உடலில் இருந்தாலும்; பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றே சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் அவர் நேற்றிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்படவிருக்கின்றன. மேலும் வயிறு தொடர்பான பிரச்னைக்காக அவர் அட்மிட் ஆகியிருப்பதாகவும் தெரிகிறது.
முன்னதாக, சில வருடங்களுக்கு முன்பு நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையிலும், மூளைக்கு செல்லக்கூடிய நரம்பில் பாதிப்பு கண்டறியப்பட்டதால் சென்னை காவேரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று நலமாக வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல முறை அவர் ஹாஸ்பிட்டலுக்கு சென்றாலும்; அவர் சொன்ன டயலாக் அவருக்கே பொருந்தும். ஆம் ரஜினி யானை இல்லை குதிரை. விழுந்தால் டக்குனு எழுந்திடுவார்.


Click it and Unblock the Notifications











