பிரமிக்க வைக்கும் மாநாடு ஏற்பாடுகள்.. விஜய்யின் சம்பவம் இன்றைக்கு தரமா இருக்கும்போலயே
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். சினிமாவில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படும் அவர்; சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருப்பதை பலரும் பாராட்டிவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க தவெகவின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடக்கவிருக்கிறது. மாநாட்டில் அவர் என்ன பேசப்போகிறார் என்பதை கேட்பதற்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆவலாக இருக்கிறது.
விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று கடந்த சில வருடங்களாகவே ஆரூடம் கூறப்பட்டது. அதனை நிறைவேற்றும் விதமாக அவரும் அரசியலுக்கு வந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு எந்தவித அலப்பறையும் இல்லாமல் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார் அவர். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடவில்லை. அதேசமயம் நடக்கவிருக்கும் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி களம் காண்கிறது.

அரசியல் கொள்கை: விஜய் தனது அரசியல் வருகையை பிரகடனப்படுத்திய பிறகு; அவரது அரசியல் கொள்கை என்ன மாதிரியாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள பலருக்கும் ஆர்வம் இருந்தது. முக்கியமாக அவர் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலப்பாரா என்றுதான் பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவரோ விநாயகர் சதுர்த்தி உள்ளிட்டவைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருந்து; தான் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தினார்.
முதல் மாநாடு: மேலும் பெரியார் சிலைக்கு மலர் தூவி தனது மரியாதையையும் செலுத்தினார். இதன் காரணமாக அவர் மீது தேசிய அரசியல் கட்சியினர் கொஞ்சம் காண்டாக இருக்கின்றனர். அதேசமயம் விஜய்யின் அரசியல் வருகையை திமுக தொண்டர்களும் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. இன்று தவெகவின் முதல் மாநாடு நடக்கவிருக்கும் நிலையில் விஜய்யை சமூக வலைதளங்களில் திமுகவினர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதற்கு விஜய்யின் ரசிகர்களும் கடுமையான எதிர்வினையை ஆற்றிவருகிறார்கள்.
மாநாடு ஏற்பாடுகள்: முதல் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் ஜோராக நடந்திருக்கின்றன. 79 உயர அடி கட் அவுட், பெரியார், காமராஜர் உள்ளிட்டோருக்கு பதாகைகள் என களைகட்டியிருக்கிறது மாநாட்டு திடல். மேலும் மாநாடு நடப்பதற்கு இடம் கொடுத்த உரிமையாளரிடம், தவெக கொடி ஐந்து வருடங்கள் அங்கு பறந்துகொண்டிருக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மாநாட்டுக்கு வருபவர்கள் மது அருந்தியிருக்கக்கூடாது என்று ஏகப்பட்ட கண்டிஷன்களையும் கறாராக போட்டிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.
என்ன பேசப்போகிறார்: கிட்டத்தட்ட பல லட்சம்பேர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக இந்த மாநாட்டை சரியாக நடத்தி நல்ல பெயரை பெற்றுவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது தவெக. முக்கியமாக வருபவர்கள் எந்தவித சிரமுமின்றி மாநாட்டையும், விஜய்யையும் பார்க்க ஏதுவாக லட்சக்கணக்கான நாற்காலிகள் திடலில் போடப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் இத்தனை லட்சம் நாற்காலிகள் போட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது இன்றைக்கு மாநாட்டு மூலம் தான் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவேன் என்பதை உணர்த்துவதற்கு விஜய் காத்திருப்பதாக கூறுகிறார்கள்.
முக்கியமாக தற்போதைய திமுக அரசை அவர் தனது பேச்சில் உரசி பார்ப்பாரா இல்லை பாஜக உள்ளிட்ட கட்சிகளை சீண்டி பார்ப்பாரா என்பதை கேட்பதற்கும் பெரும் ஆவலோடு அவர்கள் இருக்கிறார்கள். எது எப்படியோ இன்றைய மாநாடு விஜய் யார் என்பதை பிற அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தும் என்பதால் தமிழ்நாடு அரசியல் களத்தில் இன்றைய நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











