என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் அவர் எதிர்பார்த்த ரிசல்ட்டை அவருக்கு கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியிருக்கும் அவர் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார் தனுஷ். இந்தச் சூழலில் அந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ் பல விமர்சனங்களை கடந்து இன்று மிகச்சிறந்த நடிகர் என்ற இடத்தில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் இவர் எல்லாம் நிலைக்கவே மாட்டார் என்று பலரும் கூறினர். ஆனால் அவர்களின் கணிப்பை தவிடுபொடியாக்கி கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார் தனுஷ். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் ரொம்பவே அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடும் அவர் ஆடுகளம், அசுரன் படங்களுக்காக தேசிய விருதையும் வாங்கியிருக்கிறார்.

கேப்டன் மில்லர்: அவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. மேலும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியும் படத்தின் கதை தனது பட்டத்து யானை நாவலின் கதை என்றும் கூறி பரபரப்பை கிளப்பினார்.
இயக்குநர் தனுஷ்: தனுஷ் நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலித்துவருகிறார். ராஜ்கிரண் உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கிய பவர்பாண்டி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தனது 50ஆவது படத்தையும் அவரே இயக்குகிறார். அதுதொடர்பான வேலைகள் முடிந்துவிட்டன. கண்டிப்பாக பவர் பாண்டி படம் போல இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
என்ன கதை: அண்மையில் தனுஷ் 50 படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டன. படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் போஸ்டரில் தனுஷ் கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் கெத்தாக நிற்க; அவருக்கு பின்னால் காளிதாஸ் ஜெயராமும், சந்தீப் கிஷனும் ஒரு ஃபாஸ்ட் புட் கடை செட்டப்பிலிருந்து எட்டி பார்க்கும்படி இருந்தார்கள். போஸ்டருக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பை கொடுத்தனர்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: இந்தச் சூழலில் தனது இயக்கத்தில் மூன்றாவது படமாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இதில் தனுஷின் உறவினர் வருண் என்பவர் ஹீரோவாக நடிக்க; அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் போஸ்டரும் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார்.
இந்நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தனுஷ் எழுதுகிறார் என்றும்; அந்தப் பாடலில் ஜிவி பிரகாஷும், பிரியங்கா மோகனும் தோன்றவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ் மற்றும் ஹீரோயின் பிரியங்கா மோகன் என்பது நினைவுகூரத்தக்கது. தனுஷ் இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார்.


Click it and Unblock the Notifications











