அடேங்கப்பா புஷ்பா 2 சாட்டிலைட் உரிமை இவ்வளவு ரூபாயா?.. மாஸ் காண்பிக்குதே படம்
சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் புஷ்பா 2. மிகப்பெரிய எதிர்பார்ப்பை அந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது. புஷ்பா 1 போலவே புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமும் ஹிட்டடிக்கும் என்று அல்லுவின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். படமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் புஷ்பா 2 படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் அல்லு அர்ஜுன். அந்தத் திரையுலகில் அவர் ஃபேமஸாக இருந்தாலும் இந்திய அளவில் பெரிதாக கவனம் ஈர்க்காமல் இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்தார். அந்தப் படம் பான் இந்திய லெவலில் வெளியாகி சுமார் 500 கோடி ரூபாய்வரை இந்தியா முழுவதும் வசூல் செய்தது. இதன் காரணமாக அவர் பான் இந்தியா ஸ்டாராக இப்போது அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா 2 க்ளிம்ப்ஸ்: முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி படத்தின் ஷூட்டிங்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மும்முரமாக நடந்தது. கடந்த வருடம் படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. அதில் இரவில் அல்லு அர்ஜுன் வருவது போன்றும், அவரது வருகையை மக்கள் கொண்டாடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
எப்போது ரிலீஸ்: க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் படம் எப்போது ரிலீஸாகும் என்ற ஆவலோடு காத்திருந்தனர். அவர்களுக்கு ஸ்வீட் செய்தியாக படமானது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. புஷ்பா 2 ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகவிருப்பதாலும்; அந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருப்பதாலும்; பிற படங்களின் ரிலீஸுகள் தள்ளிப்போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
புஷ்பா 2 டீசர்: சூழல் இப்படி இருக்க கடந்த மாதம் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அது மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. அதனையடுத்து படத்திலிருந்து மொத்தம் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்தப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. இதன் காரணமாக அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ஹேப்பி மோடில் இருக்கிறார்கள்.
சாட்டிலைட் உரிமை: இந்நிலையில் புஷ்பா 2 படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டும் மொத்தம் 130 கோடி ரூபாய்க்கு விற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தின் ஓடிடி உரிமை 250 கோடி ரூபாய்க்கு விற்றிருப்பதாக ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவை உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஓடிடி, சாட்டிலைட் உரிமையிலேயே படம் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்வரை அள்ளியிருக்கிறது. இதனை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பேசிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











