ஏகே ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் ஆரம்பிக்கப்போகிறதாம்
சென்னை: அஜித் நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அவரது உடலுக்கு பெரிய பிரச்னை எதுவும் இல்லை; சிறிய அளவிலான அறுவை சிகிச்சைதான் என்று உறுதியானது. பூரணமாக குணமடைந்த அவர் தற்போது பைக் டூரில் இருக்கிறார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோரும் சென்றிருக்கின்றனர்.
அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அஜித்தின் பிஆர் ஓ சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்தார். இதனால் படம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

அடுத்தக்கட்ட ஷூட்டிங்: அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்தாலும் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பியிருந்தனர். அநேகமாக இன்னும் சில வாரங்களில் மீண்டும் அஜர்பைஜானிலேயே ஷூட்டிங்கை நடத்த படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகின. மேலும் படக்குழுவும் அங்கு செல்வதற்கான வேலைகளை லைகா தொடங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. அதேசமயம் லைகாவுக்கு பண பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக விடாமுயற்சி ஷூட்டிங்கை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகவும் ஒரு தகவல்.
மருத்துவமனையில் அனுமதி: இப்படி விடாமுயற்சியை சுற்றி பல தகவல்கள் சுற்றிக்கொண்டிருக்க ஏகே ரசிகர்களின் தலையில் இடி இறங்கும்படி கடந்த மாதம் ஒரு தகவல் பரவியது. அதன்படி அஜித் தனது உடலை முழு பரிசோதனை செய்வதற்காக சென்றபோது அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது என்றும் அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும் செய்தி பரவியது. ஆனால் மூளையில் கட்டி இல்லை காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் சிறிய அளவிலான வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது உறுதியானது.
பைக் டூர்: உடல்நலம் தேறிய அஜித் தனது பைக்கை எடுத்துக்கொண்டு டூர் கிளம்பியிருக்கிறார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோரும் உடன் சென்றிருக்கின்றனர். பைக் டூரின்போது அஜித் பிரியாணி செய்தது, பில்லியர்ட்ஸ் விளையாடியது உள்ளிட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி ட்ரெண்டாகின. இருந்தாலும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் குறித்து அஜித் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருக்கின்றனர்.
புதிய தகவல்: இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஏப்ரல் 10ஆம் தேதி மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் கமிட்டாகியிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கை ஜூன் மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். எனவே அதற்குள் விடாமுயற்சி ஷூட்டிங்கை முடிக்கும்படி அஜித் கேட்டுக்கொண்டதாகவும்; ஏப்ரல் 10ஆம் தேதி ஷூட்டிங்கை தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க லைகா திட்டமிட்டிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











