தமிழ் ரசிகர்களை ஏன் மலையாள சினிமா ஈர்க்கிறது? புதுசா எடுத்துள்ள ஒரு "சின்ன பார்முலா!" நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாட்டில் சமீபகாலமாக மலையாள சினிமாக்கள் நன்றாக ஓடுகின்றன. நல்ல கதையும், தரமான மேக்கிங்கும் இருந்தால் மொழி கடந்து படங்கள் வெல்லும் என்பதற்கு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் மலையாள சினிமா சாட்சியாக இருக்கிறது. அப்படி மொழி கடந்தும் நேசிக்கப்படுவதற்கு மலையாள சினிமா கொண்டிருக்கும் ஏகப்பட்ட ஃபார்முலாக்களில் பாடல்கள் பயன்படுத்தும் ஃபார்முலா இப்போது அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய சினிமாக்களின் தலைநகரமாக ஒருகாலத்தில் சென்னை இருந்தது. காலம் செல்ல செல்ல அந்தக் காட்சி மாறி அந்த மாநிலங்களே சினிமாவுக்கு தேவையான அத்தனையையும் கொண்டிருக்க ஆரம்பித்தன. கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட் ஆகியவைகளில் இப்போது டாப்பில் இருப்பது என்றால் மலையாள சினிமா உலகமான மல்லுவுட்தான். சிம்ப்பிள் லைனை வைத்துக்கொண்டு அவர்கள் உருவாக்கும் படங்கள் அடி பொலி ரகமாக மின்னிக்கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் செம அப்ளாஸ்: முக்கியமாக மலையாள சினிமாக்கள் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போடுகின்றன. கண்ணூர் ஸ்குவாட், மஞ்சும்மல் பாய்ஸ், குருவாயூர் அம்பலநடையில், ஆவேஷம் உள்ளிட்ட பல படங்கள் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றன. அவற்றுக்கு காரணம் அவர்களது மேக்கிங்கும், திரைமொழியும் முக்கிய ஃபார்முலாவாக இருக்கிறது. அவைகளில் முக்கியமான ஃபார்முலாதான் பாடல்களை ப்ளேஸ் செய்வது.
கனெக்ட் ஆக்குகிறது: என்னதான் சிறப்பாக இருந்தாலும் வேற்று மொழி ரசிகர்களை கவர்வதற்கு அவர்களுடன் கனெக்ட் ஆகும் ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்பதில் மலையாள திரையுலகினர் கவனமாக இருக்கிறார்களோ என்றே தோன்றுகிறது. மேற்கூறிய படங்களில் மஞ்சும்மல் பாய்ஸ் தமிழ்நாட்டில் கொண்டாடி தீர்க்கப்பட்டது. அதற்கு காரணமாக, ' படத்தின் மேக்கிங்' என்று கூறினாலும்; இன்னொரு காரணம் கண்மணி அன்போடு காதலன் பாடல். குணா படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலை மஞ்சும்மல் பாய்ஸில் சரியான இடத்தில் பிளேஸ் செய்து ஒலிக்கவிட்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் அவர்களோடு கனெக்ட் ஆக செய்துவிட்டார்கள்.
குருவாயூர் அம்பல நடையில்: அதேபோல்தான் குருவாயூர் அம்பல நடையில் படமும். பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் பக்கா காமெடி கதைதான். யார் பார்த்தாலும் படம் ரொம்பவே பிடிக்கும்தான். ஆனால் மேற்கொண்டு தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமாக, 'உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இடம்பெற்ற 'அழகிய லைலா' பாடலை கிட்டத்தட்ட படத்தில் பெரும்பாலும் பயன்படுத்தினார்கள். அதனைப் பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு; வேற்று மொழி படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லை. அதன் காரணமாக மேற்கொண்டு படத்தை கொண்டாடினார்கள். அதேபோல் கம்மாட்டி பாடம் படத்திலும் முக்கியமான சீனில் தளபதி படத்தின் பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும்.
தமிழிலும் உண்டுதான் ஆனால்: இந்த ஃபார்முலா தமிழில் இல்லையா என்று கேட்டால்; இருக்கிறது என்பதுதான் பதில். சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் ஒரு முழு காட்சிக்கு, 'சிறு பொன் மணி அசையும்' பாடலை ஒலிக்கவிட்டு எடுத்திருப்பார் சசிக்குமார். அந்த சீனை பார்க்கும்போது என்னவோ இந்தப் படத்தில்தான் அந்தப் பாடல் வருகிறது என்று தோன்றும் அளவுக்கு, சசிக்குமாரின் மேக்கிங் ஒன்றி போயிருக்கும். அது பெரும் வரவேற்பையும் பெற்றது. ஆனால் அதற்கு பிறகு இயக்குநர்கள் பெரிதாக அந்த முயற்சியை கையில் எடுக்கவில்லை.
லோகேஷ் கனகராஜ்: ஆனால் லோகேஷ் கனகராஜ் வந்த பிறகு தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் அதனை செய்துவருகிறார். கைதி படத்தின் முக்கியமான சீனில், 'ஆசை அதிகம் வெச்சு' பாடலை ஒலிக்கவிட்டு அதகளம் செய்தவர், விக்ரம் படத்தில், 'சக்கு சக்கு வத்திக்குச்சி' என்ற பாடலை வைத்தார். அதேபோல் கடைசியாக வெளியான லியோ படத்திலும் , கரு கரு கருப்பாயி பாடலை ஒலிக்கவிட்டு 90ஸ் கிட்ஸுகளுக்கு ஒரு நாஸ்டால்ஜியா டச்சை ஒவ்வொரு படத்திலும் கொடுத்தார்.
அவரது இந்த முயற்சிக்கு வந்த ரெஸ்பான்ஸை பார்த்து இப்போது அதனை மற்ற இயக்குநர்களும் கையில் எடுக்க ஆரம்பித்திருக்கிறார். ஜெயிலர் படத்தில் நெல்சன் திலீப்குமார், 'எங்கே என் புன்னகை' பாடலை பயன்படுத்தினார். அதேபோல் மார்க் ஆண்டனி படத்திலும் ஒரு ரெட்ரோ பாடல் பயன்படுத்தப்பட்டது. இப்படி பாடல்கள் வைக்கப்பட்டாலும் மலையாள படங்களுக்கு இணையாக ஏன் படங்கள் கொண்டாடப்படவில்லை என்ற கேள்வி எழலாம்.
அதற்கு பதில், 'பாடலை சரியான இடத்தில் பிளேஸ் செய்ய வேண்டும்' மற்றும் படத்தின் கதையும், மேக்கிங்கும் தரமாக இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்து. இப்போதைய தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஃபீல் குட் படங்கள் வருவதே அரிதாகிக்கொண்டிருக்கின்றன. டாடா, குட் நைட் போன்ற படங்கள் அந்த குறையை தீர்த்து வைத்திருக்கின்றன. மறுபக்கம் நல்ல கமர்ஷியல் படஙக்ள வருவதும் குறைந்திருக்கிறது. கமர்ஷியல் என்றாலே இப்போது துப்பாக்கி, ரத்தம், குடோன் என்ற நிலைக்கு தமிழ் சினிமா சென்றுவிட்டதோ என்றும் பலர் கவலையடைந்திருக்கின்றனர்.
எனவே தமிழ் சினிமா முதலில் கதைக்கும், மேக்கிங்குக்கும் பெரும் கவனம் செலுத்தி சரியான முறையில், இடத்தில் பாடல்களை பிளேஸ் செய்தால் கண்டிப்பாக கொண்டாடப்படும் என்பது பெரும்பாலானோரின் கருத்து. அதேபோல் பிரமாண்டம் என்பது காசிலோ, செட்டிலோ இல்லை; பிரமாண்டம் என்பது கதையிலும் அதனை காட்சிப்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது. அப்படி அந்த பிரமாண்டத்தை அடிநாதமாக மலையாள சினிமா கொண்டிருக்கிறது. அதனால்தான் அவர்களது படங்களும், படங்களில் பிளேஸ் செய்யும் பாடல்களும் இணைந்து ரசிகர்களை கட்டிப்போடுகிறது. அந்த ஃபார்முலாவை எப்போது தமிழ் சினிமா கையில் எடுக்கும் என்று பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











