Bigg Boss Tamil 8: வனிதா, பாலா, அர்ச்சனா, பிரியங்கா, பிரதீப் போல இந்த சீசனில் டெரர் பீஸ் யாரு?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று முதல் ஆரம்பம் ஆகவுள்ள நிலையில், போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. விஜய் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ள நிலையில், விஜய் சேதுபதியின் புதிய ஹோஸ்டிங் எப்படி இருக்கும் என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
கமல்ஹாசன் கடந்த 7 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகளவில் உள்ள தமிழ் ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு கொண்டு சென்றார். 3 கோடி பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த சீசனில் அந்த பார்வையாளர்களின் கணக்கை மக்கள் செல்வன் அதிகரிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது நிச்சயம் குறையாமல் பார்த்துக் கொள்வார். பிக் பாஸ் தொகுப்பாளரை தாண்டி ரசிகர்களை தினமும் நிகழ்ச்சியை பார்க்க வைப்பதே போட்டியாளர்கள் தான். அதிலும், டெரர் போட்டியாளர்களால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்து டிஆர்பியில் வெயிட் காட்டும். அப்படி இந்த சீசனில் நுழைந்துள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து இங்கே லேசாக அலசுவோம்.
பிக் பாஸ் கன்டென்ட் கிங்: பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் அழகு பதுமைகளாக சிலர் இருப்பார்கள், சிலர் மிக்சர் போட்டியாளர்களாக இருப்பார்கள். ஆனால், தினமும் கன்டென்ட் கொடுத்து நிகழ்ச்சியை நடத்தும் போட்டியாளர்களைத் தான் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். முதல் சீசனில் ஓவியா ரசிகர்களை அதிகம் ஈர்த்தாலும் ஜூலியின் அட்டகாசங்கள் வேறலெவலில் இருந்தன. 2வது சீசனில் தாடி பாலாஜி தலையில் குப்பையைக் கொட்டி ஐஸ்வர்யா தத்தா அதகளப்படுத்தினார். 3வது சீசனில் வனிதா விஜயகுமார் சொல்லவே வேண்டாம் வத்திக்குச்சி வனிதா என பட்டம் வாங்கி பட்டையைக் கிளப்பினார்.

ஜூலி முதல் பிரதீப் ஆண்டனி வரை: 4வது சீசனில் அர்ச்சனா அன்பு தான் ஜெயிக்கும் என ஒரு பக்கம் அலப்பறை செய்ய அவுட் ஆஃப் தி பாக்ஸ் கேம் ஆடி பாலா ரசிகர்களை கவர்ந்தார். சுரேஷ் தாத்தாவின் சகுனி கேம் சரியான கன்டென்ட்டாக அமைந்தது. அபிஷேக் ராஜா பரிதாபங்கள் என்றே போடும் அளவுக்கு அவர் இருந்த வரை பிக் பாஸ் வீட்டில் ருத்ர தாண்டவம் ஆடினார். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்பது போல கடந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டில் பிரளயத்தையே உண்டாக்கி அவர் வெளியேற்றப்பட்டதும் மக்களின் நாயகனாக மாறினார். அதே போல இந்த சீசனில் யார் தங்கள் ஆட்டத்தைக் காட்ட காத்திருக்கின்றனர் என்கிற ஆவல் தான் அதிகம் உள்ளன.

ரவீந்தர் ஒருவரே போதும்: பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வந்த ஃபேட்மேன் என ரசிகர்களால் அழைக்கப்படும் ரவீந்தர் சந்திரசேகர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததில் இருந்தே சோஷியல் மீடியாவில் அதிக கவனத்தை பெற்று வந்தார். பண மோசடி வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று வந்த நிலையில், அவரும் ஒரு போட்டியாளராக உள்ளே நுழைந்திருக்கும் நிலையில், யூடியூப் பேட்டிகளில் போல்டாக பேசுவது போல பல விஷயங்களை பேசி கன்டென்ட் கிங்காக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவுண்டு சரோஜா ஐஸ்வர்யா: ரவீந்தரையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு (அது ரொம்ப கஷ்டம் தான்) டஃப் ஆன போட்டியாளராக ஐஸ்வர்யா மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரேகா போன்ற சீனியர் நடிகைகள் போல சும்மா வந்துவிட்டு செல்ல மாட்டார் ஐஸ்வர்யா அவர் இறங்கி ஆட்டம் ஆடினால் கன்டென்ட் அல்வா போல கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். நிச்சயம் தனது சோக கதையை சொல்லி ரசிகர்களை கண்கலங்க வைப்பார் என்பதும் உறுதி.

கவுண்டம்பாளையம் ரஞ்சித்: கடந்த சில மாதங்களாகவே மைக்கை பிடித்தாலே சர்ச்சையாக மாறும் அளவுக்கு கவுண்டம்பாளையம் படத்தை இயக்கி நடித்த நடிகர் ரஞ்சித் மாறியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் தர்ஷா குப்தாவின் டிரெஸ் பற்றியெல்லாம் கமெண்ட் அடித்து வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் இருந்தால் சரி தான். பால் டப்பாவின் தலைமுடியை பார்த்து விட்டு என்ன சொல்வாரோ என்கிற பயமும் அதிகமாகவே உள்ளது என இப்பவே நெட்டிசன்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர். இவர்களை தாண்டி இந்த சீசனில் மேலும், சிலரும் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புகள் அதிகம். லெட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்.. புது ஆட்டம் எப்படி இருக்கப் போகுதுன்னு!


Click it and Unblock the Notifications











