Custody Box Office - ஒரு வாரம் ஓவர்.. வசூலில் டல் - கஸ்டடிக்கு விழுந்த மொரட்டு அடி
சென்னை: Custody Box office (கஸ்டடி பாக்ஸ் ஆபிஸ்) கஸ்டடி படம் ரிலீஸாகி ஒரு வாரம் முடிவடைந்திருக்கும் சூழலில் அதன் வசூல் குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது.
சென்னை 600028 படம் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு தனது முதல் படத்திலேயே சிம்ப்பிள் ஒன்லைனை எடுத்துக்கொண்டு ஜாலியான திரைக்கதை அமைத்து வெற்றி கண்டவர். அதன் பிறகு அவர் இயக்கிய சரோஜா சூப்பர் டூப்பர் ஹிட்டாக கோவா சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அவரை முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இணைத்தது.

சறுக்கிய வெங்கட் பிரபு: மங்காத்தா படத்துக்கு பிறகு அவர் இயக்கிய பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்தன. அதேபோல் அவர் இயக்கிய பார்ட்டி படமும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. எனவே வெங்கட் பிரபு ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அப்படிப்பட்ட சூழலில் வெற்றி பசியோடு இருந்த சிம்புவை மாநாடு படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு.
மெகா ஹிட்டான மாநாடு: டைம் லூப் கான்செப்ட்டை மையமாக வைத்து உருவான அந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு புது வரவு. ஸ்க்ரீன் ப்ளேயில் வித்தை காட்டியதன் மூலம் படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. சிம்புவின் இரண்டாவது இன்னிங்ஸுக்கு சிறப்பான தொடக்கமாகவும் அந்தப் படம் அமைந்தது. படம் உருவாக்கப்பட்டிருந்த விதத்தை பார்த்த ரசிகர்கள் சிம்புவுக்கு மட்டுமின்றி வெங்கட் பிரபுவுக்கும் கம்பேக்காக அமைந்தது மாநாடு என கருத்து தெரிவித்தனர்.

வெங்கட் பிரபுவின் கஸ்டடி: மாநாடு படத்துக்கு அடுத்ததாக நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கினார். தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான கஸ்டடி நாக சைதன்யாவுக்கு முதல் நேரடி தமிழ் படமாக அமைந்தது. இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்த அந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை (மே 12) ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.போகப்போக படம் பிக்கப்பாகும் என எதிர்பார்த்த சூழலில் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர்.
கஸ்டடிக்கு விழுந்த மொரட்டு அடி: படம் வெளியான முதல் நாளில் வசூல் டல்லடிக்க சனி, ஞாயிற்று கிழமைகளில் வசூலில் முன்ன்னேறும் என படக்குழு நினைத்திருந்தது. ஆனால் அந்த நாள்களிலும் வசூலில் சொதப்பியது கஸ்டடி. இந்நிலையில் படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்திருக்கும் சூழலில் வசூல் குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது. அதன்படி கஸ்டடி படமானது இதுவை பத்து கோடி ரூபாய்கூட வசூலிக்கவில்லையாம். படத்தில் நடிக்க நாக சைதன்யாவுக்கு பத்து கோடி ரூபாய் சம்பளம் என கூறப்பட்ட சூழலில் அந்தத் தொகையை கூட வசூலிக்க முடியாமல் கஸ்டடி மொரட்டு அடி வாங்கியிருக்கிறது.

வெங்கட் பிரபுவின் அடுத்த படம்: வெங்கட் பிரபு அடுத்ததாக விஜய்யை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற தகவல் கோலிவுட்டில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. அந்தப் படம் மாநாடு படம் போலவே வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும் என கூறப்படுவதால் விஜய் படத்தின் மூலம் வெங்கட் பிரபு மீண்டும் கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர். அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் ஒரு செய்தி உலாவிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











