Dhanush 50 - 50ஆவது படம்.. தனுஷ் செய்திருக்கும் வேற மாதிரியான ப்ளான்
சென்னை: Dhanush 50 (தனுஷ் 50) தனுஷ் தனது 50ஆவது படத்துக்காக செய்திருக்கும் ப்ளான் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றால் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் தனுஷ். ஆனால் அப்படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்துக்கு பிறகு தனுஷ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார்.

கேப்டன் மில்லர்: தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் அருண் மாதேஸ்வரன். அவரது இயக்கத்தில் கேப்டன் மில்லர் உருவாகிவருவதால் நிச்சயம் இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகி கவனம் ஈர்க்கும் என்று தனுஷும், அவரது ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
கவனம் ஈர்த்த ஃபர்ஸ்ட் லுக்: இதற்கிடையே கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கையில் பெரிய துப்பாக்கியுடன் இருக்கும் தனுஷுக்கு கீழே பலர் இறந்து கிடப்பது போன்று அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் நிச்சயம் படம் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
தனுஷ் 50: இதற்கிடையே தனுஷின் 50ஆவது படம் குறித்த அப்டேட் தெரியவந்தது. அதன்படி படத்தை அவரே இயக்கவிருக்கிறார். வடசென்னையை மையமாக வைத்து உருவாகவிருக்கும் அப்படத்துக்கு ராயன் என பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே ராஜ்கிரணை வைத்து தனுஷ் இயக்கிய பவர்பாண்டி படம் பலத்த வரவேற்பைப் பெற்றதால் நிச்சயம் இந்தப் படமும் ஹிட்டாகும் என நம்பப்படுகிறது.
தனுஷின் புதிய ப்ளான்: இந்நிலையில் தனது 50ஆவது படத்துக்காக ஒரு ப்ளான் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் ஷூட்டிங்கை சோழிங்கநல்லூரில் இருக்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் நிலத்தில் நடத்துவதாக திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அந்த நிலத்தில் மரங்கள் ஏதும் இல்லாமல் வெட்ட வெளியாக இருந்ததால் இப்போது மரங்கள் இருக்கும் நிலத்தை பார்த்து அங்கு ஷூட்டிங் நடத்தவிருக்கிறாராம்.
அதுமட்டுமின்றி அந்த நிலத்தில் கிட்டத்தட்ட 100 வீடுகள் உடைய செட் போட்டு அந்த செட்டிலேயே மொத்த படத்தையும் முடிக்க முடிவெடுத்திருக்கிறாராம் தனுஷ். இந்தத் தகவல் இப்போது கோலிவுட்டில் உலாவந்துகொண்டிருக்கிறது.
தனுஷ் கெட்டப் இதுவா: இச்சூழலில் சில நாட்களுக்கு முன்பு தனுஷ் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது மொட்டையடித்தார் அவர். அதனைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் இதுதான் 50ஆவது பட கெட்டப்பா எனவும்; கேப்டன் மில்லர் படத்துக்காக அதிக அளவில் முடி வளர்த்திருந்த தனுஷ் தற்போது மொட்டை அடித்திருப்பதன் மூலம் கேப்டன் மில்லர் ஷூட்டிங் முடிந்துவிட்டதா என்றும் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் மூலம் கேள்வி கேட்டுவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











