Maamannan - மேற்கு மாவட்ட அரசியல்தான் மாமன்னன் - அப்போ டார்கெட் எடப்பாடி பழனிசாமிதானோ?
சென்னை: Maamannan (மாமன்னன்) மாமன்னன் படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியிருக்கும் விஷயங்கள் ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரி செல்வராஜ். அந்த காலகட்டத்தில் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். ராமுக்கு மிக மிக நெருக்கமான உதவி இயக்குநராக திகழ்ந்தார். மேலும் தனது வாழ்க்கையை ராம்தான் வடிவமைத்தார் என பல மேடைகளில் மாரி செல்வராஜ் ஓபனாகவே பேசியிருக்கிறார்.

பரியேறும் பெருமாள் மாரி: பல வருடங்கள் உதவி இயக்குநராக இருந்துவிட்டு தனது முதல் படமாக கதிரை வைத்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கினார். சாதிய அட்டூழியங்களை தைரியமாக அதேசமயம் பக்குவமாக பேசியிருந்த அந்தப் படம் தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. முதல் படத்திலேயே தனக்குள் எவ்வளவு பெரிய இயக்குநர் இருக்கிறார் என்பதை மாரி செல்வராஜ் அதிரடியாக காண்பித்தார்.
கர்ணன்: அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் கொடியன்குளம் கலவரத்தை பற்றி பேசியிருந்தது. அந்தப் படம் ஹிட்டானாலும் முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பு கர்ணனுக்கு கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி மாரி செல்வராஜ் சில விஷயங்களில் தவறு செய்துவிட்டார்; கமர்ஷியல் ஹீரோவுக்கென காம்ப்ரமைஸ் ஆகிவிட்டார் என ரசிகர்கள் கூறினர்.

மாமன்னன் மாரி செல்வராஜ்: மாரி செல்வராஜ் மூன்றாவது படமாக மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். அதில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் வடிவேலு இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை பார்க்காத வடிவேலுவை இதில் பார்க்கலாம் என மாரி செல்வராஜ் தொடர்ந்து கூறிவருவதால் படத்தின் மீதும், வடிவேலு கேரக்டர் மீதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மேற்கு மாவட்ட அரசியல்; டார்கெட் எடப்பாடி பழனிசாமி?: இந்தச் சூழலில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியிருந்த மாரி செல்வராஜ் மாமன்னன் படமானது தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட அரசியலை பேசப்போகிறது என கூறியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சு தற்போது கவனம் ஈர்த்து பல கேள்விகளை ரசிகர்களிடம் உருவாக்கியிருக்கிறது. அதாவது, படத்தில் ஹீரோவாக நடித்திருப்பது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மாரி செல்வராஜ் தொட்டிருப்பதோ மேற்கு மாவட்ட அரசியல். எனவே மேற்கு மாவட்டங்களான சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கதைக்களம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆளுங்கட்சி அமைச்சரை வைத்து எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியையும், அவர் மேற்கு மாவட்டத்தில் செய்த அரசியலையும்தான் மாரி பேசியிருக்கிறாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
வடிவேலு கையில் இருப்பது யார்?: அதேபோல் சமீபத்தில் வடிவேலுவின் லுக் வெளியிடப்பட்டது. அதில் ஒரு கையில் பச்சையும் குத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து வடிவேலுவின் கையில் இருக்கும் உருவம் யாராக இருக்கும் என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்; பார்ப்பதற்கு கர்ணன் படத்தில் நடித்த லாலின் உருவம் போல தெரிகிறது. எனவே கர்ணன் படத்துக்கும், மாமன்னன் படத்துக்கும் சம்பந்தம் இருக்குமோ; அப்படி இருந்தால் எல்சியூ போல் எம்சியூ உருவாகிவிடும் என கணக்கு போட்டுவருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் மாமன்னன் ஜூன் 1ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











