Mari Selvaraj - என்னது வாழை படம் மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாறா?.. என்னென்ன சம்பவங்கள் இருக்கோ
சென்னை: பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் கடைசியாக மாமன்னன் படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த சூழலில் அந்தப் படத்தின் கதை குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இயக்குநர் ராமிடம் அலுவலக உதவியாளராக இருந்து பின்னர் அவரிடம் உதவி இயக்குநராக மாறியவர் மாரி செல்வராஜ். அதுமட்டுமின்றி தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் உள்ளிட்ட புத்தகங்களை எழுதி எழுத்தாளராகவும் ஜொலித்தவர். அதுமட்டுமின்றி ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் ஒரு காட்சியிலும் நடித்திருக்கிறார். ராமுக்கு மிக மிக நெருக்கமானவரும் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

பரியேறும் பெருமாள்: பல வருடங்கள் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் பொட்டில் அடித்தாற்போல் படம் பேசியிருந்தது.
கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ்: படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே மாரி செல்வராஜ் தான் எவ்வளவு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், சென்சிட்டிவ் விஷயத்தை தொட்டு அதை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக அந்தப் படம் முடியும்போது அவர் வைத்த க்ளைமேக்ஸ் ஷாட் படம் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாரி செல்வராஜ் மீது பலரது கவனத்தை திருப்பியது.
கர்ணன் மாரி: முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தி இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. அப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இருப்பினும் இரண்டு படங்களிலேயே மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநராகிவிட்டார்.
மாமன்னன்: அவரது இயக்கத்தில் கடைசியாக மாமன்னன் திரைப்படம் வெளியானது. ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து ஒருவர் எம்.எல்.ஏவாகவே ஆனாலும் அதிகார சாதியினர் அவரை எப்படி நடத்துகிறார்கள் என்பதை பொட்டில் அறைந்தார் போல் பேசியிருந்தார் மாரி செல்வராஜ். வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டானது. மாமன்னன் படம் மாரி செல்வராஜின் கிராஃபை உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை.
வாழை: இந்த சூழலில் மாமன்னன் படத்தை முடித்த கையோடு வாழை படத்தை தொடங்கினார் மாரி செல்வராஜ். முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாழை படத்தின் கதை குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி வாழை தார் ஏற்றிகொண்டு செல்லும் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி சிறுவர்கள் உயிரிழந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
முக்கியமாக மாரி செல்வராஜ் சிறுவராக இருந்தபோது அந்த லாரியில் பயணித்து விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தார் என்றும் அதை மையப்படுத்திதான் இந்த கதையை அவர் எழுதியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படம் முதலில் ஹாட் ஸ்டாரில் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் இப்போது படத்தை தியேட்டரில் ரிலீஸ் திட்டமிட்டிருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
மாரி செல்வராஜ் சிறு வயதில் நிறைய பிரச்னைகளை சந்தித்தவர். அதனை அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். மேலும் அவர் எழுதிய புத்தகங்களிலும் அதனை பதிவு செய்திருக்கிறார். ஒருவேளை வாழை அவரது வாழ்க்கை வரலாறாக இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக அதிர்வு ஏற்படுத்தக்கூடிய பல சம்பவங்களை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications