Rajini 171 - ரஜினி 171 - லோகேஷ் கனகராஜ் கையில் எடுக்கப்போகும் கதைக்களம் இதுவா?
சென்னை: Rajini 171 (ரஜினி 171) லோகேஷ் கனகராஜும், ரஜினிகாந்த்தும் இணையும் படத்தின் கதைக்களம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ்தான் இப்போது கோலிவுட்டின் டாப் இயக்குநர். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ச்சியாக நான்கு படங்களையும் ஹிட் படமாக கொடுத்திருக்கிறார். இதனால் அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் போட்டாபோட்டியில் இருக்கின்றனர். அவரது இயக்கத்தில் நடித்தால் கண்டிப்பாக ஒரு ப்ளாக் பஸ்டரோ இல்லை சூப்பர் டூப்பர் ஹிட்டோ தங்களது கேரியரில் சேர்ந்துகொள்ளும் என்ற கணக்குதான் அதற்கு காரணம்.

மெகா ப்ளாக் பஸ்டர் விக்ரம்: லோகேஷ் கனகராஜின் கிராஃபை இந்த அளவு உச்சத்துக்கு கொண்டு சென்றது கமல் ஹாசனுடன் அவர் இணைந்த விக்ரம் படம். அந்தப் படம் 500 கோடி ரூபாய் வசூலித்தது. அது கமலுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே உற்சாகம் கொடுத்தது. குறிப்பாக திரைக்கதையில் லோகேஷ் கனகராஜ் செய்திருந்த மாயாஜாலம் (எல்சியூ) படத்தை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியது.
லியோ: அவர் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் லியோவில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மாத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். காஷ்மீரில் படத்தின் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து தற்போது சென்னையில் விறுவிறுப்பாக லியோ ஷூட்டிங் நடந்துவருகிறது.
லோகேஷ் கனகராஜின் லைன் அப்: லியோ படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்கவிருக்கிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. ஏற்கனவே கைதி 2 படத்தை இயக்குவார் என்றும், ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்தே ஒரு படத்தை இயக்குவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட்டாக ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் இணைவார். அதை முடித்துவிட்டு கைதி 2வை தொடங்குவார் என்ற தகவல் இப்போது பரவுகிறது.
ரஜினிகாந்த்துடன் இணையும் லோகேஷ் கனகராஜ்?: விக்ரம் படத்தின் மெகா வெற்றியை அடுத்து கமலும், லோகேஷ் கனகராஜும் ரஜினியை சந்தித்தனர். அப்போதே லோகேஷ் இயக்கத்தில் நடிப்பதற்கு ரஜினி விருப்பம் தெரிவித்ததாகவும், அதனையடுத்து ஒன் லைனையும் லோகேஷ் பிடித்துவிட்டார் எனவும் பேசப்பட்டது. ஆனால் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்க கமிட்டானார். படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது. இதனையடுத்து ரஜினியை வைத்து அவர் படம் இயக்கப்போவதாக இயக்குநர் மிஷ்கின் உறுதிப்படுத்தியிருந்தார்.

கதைக்களம் என்ன: இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கப்போகும் படத்தின் கதைக்களம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, போலி என்கவுன்ட்டர்களை மையமாக வைத்து படம் உருவாகவிருக்கிறதாம். அதுமட்டுமின்றி உண்மையில் நடந்த போலி என்கவுன்ட்டர் சம்பவங்களை வைத்து லோகேஷ் கனகராஜ் கதையை தயார் செய்கிறார் என்றும் பேசப்படுகிறது. இதனையடுத்து ரஜினிகாந்த் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
ரஜினி 170ம் உண்மை சம்பவம்?: இதற்கிடையே லால் சலாம் படத்தை முடித்த பிறகு ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் இஸ்லாமிய காவல் துறை அதிகாரியாக நடிக்கவிருப்பதாகவும், அந்தக் கதையும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் உருவாக்கப்படுகிறது என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











