Ethir Neechal Marimuthu - நடிப்பில் மட்டுமில்லை.. படைப்பாளியாகவும் மின்னியவர்..மாரிமுத்துவின் மறுபக்கம்
சென்னை: Ethir Neechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) நடிகர் மாரிமுத்துவை பலரும் எதிர்நீச்சல் ஆதிகுணசேகரனாகத்தான் பார்த்திருப்பார்கள். ஆனால் அவர் சிறந்த படைப்பாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் நாடகத்தில் நடித்தவர் மாரிமுத்து. ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் அதகளமாக நடித்திருந்தார். அவர் சொல்லும் ஏய் இந்தாம்மா என்ற வசனமும் தனது தொண்டையை செருமுவதும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. முக்கியமாக பெண்கள் மட்டும் பார்த்துக்கொண்டிருந்த சீரியலை தனக்காக இளைஞர்களையும் பார்க்க வைத்தார் மாரிமுத்து.

உதவி இயக்குநர்: மாரிமுத்துவை பலரும் ஆதிகுணசேகரனாகத்தான் அறிவார்கள். ஆனால் அவர் இயக்குநராக மாற வேண்டும் என்றுதான் சென்னைக்கு வந்தவர். அதன்படி அவர் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, சீமான், ராஜ்கிரண் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக தனது பயணத்தை தொடர்ந்தார். மணிரத்னத்திடமும் சில காலம் வேலை பார்த்த அவர் பாடலாசிரியர் வைரமுத்துவிடம் சில வருடங்கள் உதவியாளராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஈகோ இல்லாத மாரிமுத்து: மாரிமுத்துவை பொறுத்தவரை எந்த ஈகோவும் இல்லாமல் பழகக்கூடியவர். இயல்பாகவே நகைச்சுவை அதிகம் உள்ள அவரைப் பற்றி எஸ்.ஜே.சூர்யாகூட ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் பேசினால் அருகில் இருப்பவர்கள் சிரித்துக்கொண்டே இருப்பார்களாம். எஸ்.ஜே.சூர்யாவிடம் மட்டும் வாலி, குஷி ஆகிய படங்களில் பணியாற்றினார் மாரிமுத்து.
இயக்குநராக மாரிமுத்து: மாரிமுத்து முதன்முறையாக பிரசன்னாவை வைத்து கண்ணும் கண்ணும் படத்தை இயக்கினார். அந்தப் படம் கடந்த ஆம் ஆண்டு வெளியானது. அது சுமாரான வரவேற்பையே பெற்றது.அதனையடுத்து விமல், பிரசன்னாவை வைத்து கடந்த ஆம் ஆண்டு புலிவால் படத்தை இயக்கினார். அந்தப் படமும் ஓரளவே வரவேற்பை பெற்றது. இருந்தாலும் அந்தப் படத்தில் இடம்பெற்ற கானாங்குருவி பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது.
மறுபக்கம்: பொதுவாக நாம் ஏதேனும் பரிசு கொடுத்தால் ப்ளாஸ்டிக் கவரிலோ அல்லது வேறு ஏதேனும் பையிலோ போட்டு கொடுப்போம். ஆனால் மாரிமுத்து அதில் வித்தியாசமாக சிந்தித்தவர். தனக்கென ஒரு பையை உருவாக்கிய அவர்; அந்தப் பையில் தமிழ் எழுத்துக்கள பொறித்தார். அதில் அத்தனை தமிழ் எழுத்துக்களும் இருக்கும். யாருக்கேனும் பரிசு கொடுத்தால் புத்தகத்தைதான் பரிசாக கொடுப்பார். மாரிமுத்து இயக்குநர், நடிகர் என்றும் அந்த பையில் அச்சிடப்பட்டிருக்கும். தமிழ் எழுத்துக்கள் பொறித்த பையை அவர் தனியாக தயாரித்ததிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் மொழி மீது அவருக்கு எவ்வளவு ஈர்ப்பு இருந்தது என்பதை. மாரிமுத்துவின் மரணம் பலருக்கும் நிச்சயம் அதிர்ச்சியைத்தான் கொடுத்திருக்கும்.


Click it and Unblock the Notifications











