Vijay Antony Daughter - தற்கொலை முதல் சிக்கிய கடிதம்வரை.. விஜய் ஆண்டனி மகள் இறப்பில் என்னென்ன நடந்தது?
சென்னை: Vijay Antony Daughter (விஜய் ஆண்டனி மகள்) விஜய் ஆண்டனி மகள் மீரா கடந்த 19ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.
நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட விஜய் ஆண்டனி தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். அவரது தந்தை தற்கொலை செய்து உயிரிழந்தார். அதன் பிறகு படிப்படியாக இசையை கற்று சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி பிறகு இசையமைப்பாளராக மாறியவர். யாரிடமும் ஈகோ பார்க்காமல் பழகுவதற்கு எளிமையானவர் விஜய் ஆண்டனி. அதேபோல் தன்னிடம் யாரேனும் கதை சொல்ல வந்து அந்த கதை பிடிக்காவிட்டால் சொல்ல வந்தவரின் மனம் நோகாதபடி பேசி திருப்பி அனுப்பக்கூடியவர்.

விஜய் ஆண்டனி குடும்பம்: விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மீரா, லாரா என்ற இரண்டு பெண் குழந்தைகள். இவர்களில் மீரா சென்னையில் சர்ச் பார்க் கான்வெண்ட்டில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார். படிப்பில் சுட்டியான மீரா அதை தவிர்த்து மாணவர் சங்க செயலாளர், கல்ச்சுரல் கமிட்டி தலைவர் என பொறுப்புகளை வகித்தவர்.
கலகலப்பான மீரா: மீராவும் தனது தந்தை போல் யாரிடமும் அதிர்ந்து பேசாதவர். தன்னுடைய ஒரு வார்த்தைக்கூட அடுத்தவரை துன்புறுத்திவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தவர். வீட்டில் பணியாட்கள் இருந்தும் அவர்களை வேண்டுமென்றே வேலை வாங்காமல் தனக்கு தேவையானதை தானே செய்துகொள்வாராம் மீரா. இதை வீட்டில் பணிபுரிந்த ஒரு பெண்ணும் உறுதிப்படுத்தியிருந்தார். அதேபோல் தன்னுடைய தோழிகளிடமும் கலகலப்பாக பேசக்கூடியவராம்.
மன உளைச்சல்: சூழல் இப்படி இருக்க அவர் கடந்த ஒரு வருடமாக மன உளைச்சலில் சிக்கியதாக கூறப்படுகிறது. அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் மீரா மன உளைச்சலில் இருந்தார் என்பதை நம்பவே முடியவில்லை என்கின்றனர் அவரது தோழிகளும், தோழிகளின் பெற்றோரும்.
தற்கொலை: இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி அதிகாலை தன்னுடைய வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில் அறை கதவை விஜய் ஆண்டனி தட்டியபோது கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்றதாகவும் அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் மீரா இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு தனது வீட்டு பணியாட்களின் துணையோடு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு மீராவின் உடலை கொண்டு சென்றார்கள். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
நான்கு மணி நேரம்: இதனால் உடைந்து போன விஜய் ஆண்டனியும் அவரது மனைவி பாத்திமாவும் மகளின் உடலை உடற்கூராய்வுக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அங்கு உடனடியாக உடற்கூராய்வு செய்யப்படாமல் சுமார் நான்கு மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒருவழியாக உடற்கூராய்வு முடிந்து விஜய் ஆண்டனி இல்லத்துக்கு உடல் கொண்டுவரப்பட்டது.
உடல் அடக்கம்: விஷயம் அறிந்து திரையுலக பிரபலங்கள் நேராக அஞ்சலி செலுத்தி விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறினர். உண்மையில் சொல்லப்போனால் யாராலும் ஆறுதல் சொல்ல முடியாத நிலைதான் அங்கு நிலவியிருக்கிறது. ஏனெனில் விஜய் ஆண்டனி இழந்தது தன்னுடைய மகள் என்பதால் எந்த ஆறுதலும் அவரை தேற்றாது என்பதுதான் உண்மை. மீராவின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நேற்று காலை அடக்கம் செய்தார்கள்.
உடைந்து அழுத விஜய் ஆண்டனி: இறந்த நிலையில் தனது மகளின் புகைப்படம் எந்த மீடியாவிலும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் விஜய் ஆண்டனி. ஒரு தந்தையாக யாராக இருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பார்கள். கல்லறைத் தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது விஜய் ஆண்டனி அந்த சவப்பெட்டியில் சாய்ந்து உடைந்து அழுதார். அதேபோல் பாத்திமாவும் உறைந்துபோய்தான் நின்றதாக அங்கிருந்தவர்கள் சொல்கிறார்கள்.
ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்: மீராவின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாத பாத்திமா எந்த பிரச்னையாக இருந்திருந்தாலும் தன்னிடமாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே. இந்த ஜென்மத்தில்தான் இணைந்து வாழ முடியவில்லை. அடுத்த ஜென்மத்திலாவது வாழ்வோம் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அழுதபடி கூறியிருக்கிறார். விஜய் ஆண்டனியோ தனது மகள் இறந்த நாளில் ஒரு துளி தண்ணீர்கூட குடிக்கவில்லையாம்.
கடிதம்: மீராவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று பலரும் பேசிவருகிறார்கள்.மீரா ஏற்கனவே மன உளைச்சலுக்கு சிகிச்சை எடுத்த ரிப்போர்ட்டுகளை காவல் துறையினரிடம் விஜய் ஆண்டனி சமர்ப்பித்ததாக தெரிகிறது. மேலும் தற்கொலை கடிதம் ஒன்று சிக்கியதாகவும் கூறப்படுகிறது. அதில் மீரா, 'லவ் யூ ஆல்; மிஸ் யூ ஆல்.. நான் இல்லாமல் எனது குடும்பம் தவிக்கும்' என குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இந்த தற்கொலைக்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. ஒருபக்கம் மகளின் தற்கொலை வலி கொடுத்துக்கொண்டிருக்க; மறுபக்கம் அதற்கான காரணம் தெரியாமல் நாம் ஏதும் மகளுக்கு குறை வைத்துவிட்டோமோ என்ற குழப்பத்தில் விஜய் ஆண்டனி - பாத்திமா தம்பதி உறைந்துபோய் நிற்கிறது. யாரின் ஆறுதலும் அந்த தம்பதியை தேற்றாது. காலம் ஒரு பிடிமானத்தை கொடுத்து அந்தத் தம்பதியை தேற்ற இயற்கை ஆவன செய்யட்டும்


Click it and Unblock the Notifications











