Bobby - கோலிவுட் வந்திருக்கும் 16,000 கோடி ரூபாய் அதிபதி யார் தெரியுமா?.. லைகாவை கழற்றிவிடப்போகிறாரா ரஜினி?
சென்னை: Bobby Balachandran (பாபி பாலசந்திரன்) தமிழ் சினிமாவில் புதிதாக பாபி என்கிற தயாரிப்பாளர் களத்தில் குதித்துள்ளார். அவர் டிமாண்டி 2 காலனி படத்தையும் தயாரித்திருக்கிறார். சமீபத்தில்கூட ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கோலிவுட்டில் எத்தனையோ தயாரிப்பு நிறுவனங்கள் கோலோச்சியிருக்கின்றன. ஆனால் காலப்போக்கில் கார்ப்பரேட் கம்பெனிகளின் வருகையால் பாரம்பரியமான பல தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்று இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டன; அல்லது முன்னர் போல் வீரியமாக இயங்காமல் இருக்கின்றனர். தற்போது தமிழ் சினிமாவில் தயாரிப்பில் ஆட்சி செய்யும் நிறுவனங்கள் என்றால் சன் பிக்சர்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் தான்.

சன் பிக்சர்ஸின் படங்கள்: சன் பிக்சர்ஸ் முதன்முதலில் படங்களை வெளியிட்டுத்தான் வந்தது. அதனையடுத்து படங்களை தயாரிக்கவும் செய்தது. முதல் படமாக ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தை பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்தது. அந்தப் படம் மெகா ஹிட்டாகி வசூலை வாரி குவித்தது. அதனையடுத்து தொடர்ந்து படங்களை தயாரித்துவரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடைசியாக ஜெயிலர் படத்தை தயாரித்தது. அந்தப் படமும் மெகா ஹிட்டாகி உலகம் முழுவதும் 700 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. அடுத்தாக ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தையும் அந்நிறுவனம் தயாரிக்கிறது.
சாம்ராஜ்ஜியம் நடத்தும் லைகா: சன் பிக்சர்ஸுக்கு போட்டியாக லைகாவும் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தியுள்ளது. கத்தி படத்தின் மூலம் தயாரிப்பில் இறைங்கிய லைகா தொடர்ந்து தயாரித்துவருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களை தயாரித்த லைகா இப்போது இந்தியன் 2, விடாமுயற்சி, லால் சலாம், வேட்டையன் படங்களை தயாரித்துவருகிறது. லைகா கையில் வைத்திருக்கும் படங்கள் அனைத்துமே பெரிய ஹீரோக்களின் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாபி: இந்நிலையில்தான் பாபி என்கிற பாலசந்திரன் என்பவரும் தயாரிப்பில் குதித்திருக்கிறார். அவர் முதல் படமாக டிமாண்டி காலனி படத்தின் இரண்டாவது பாகத்தை தயாரித்திருக்கிறார். அஜய் ஞானமுத்து படத்தை இயக்கியிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் அவர். எனவே அடுத்தடுத்து படங்களை தயாரிக்கவும் அவர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
ரஜினியுடன் கூட்டணி: சமீபத்தில்கூட ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்தார் அவர். அந்தப் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகின. இதனையடுத்து அவர் ரஜினிகாந்த்தை வைத்து பிரமாண்டமாக படம் ஒன்றை தயாரிக்கவிருப்பதாகவும் அந்தப் படம் 2025ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் தகவல்கள் கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் அவர் யார் அவரது பின்னணி என்ன என்பது குறித்த புதிய தகவலும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி ரஜினிக்கும் பாபிக்கும் வேவ் லெங்த் செட் ஆகும்பட்சத்தில் இன்னும் சில படங்களையும் அவரது தயாரிப்பில் ரஜினி நடிக்கலாம். இதனால் லைகாவிடமிருந்து மெல்ல மெல்ல சூப்பர் ஸ்டார் விலகலாம் என்றும் முணுமுணுப்பு எழுந்திருக்கிறது.
யார் இந்த பாபி?: அதாவது பாபி அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறாராம். அமெரிக்கா நாட்டின் சைபர் க்ரைம் போலீஸுக்கும் இவரின் நிறுவனம்தான் பணியாற்றுகிறதாம். இவரது சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 16,000 கோடி என்கிறார்கள். கோலிவுட்டில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் சன் பிக்சர்ஸ் மற்றும் லைகாவுக்கு கடுமையான போட்டியாக இவர் இருப்பார் என்றும் கருதப்படுகிறது.
முக்கியமாக ரஜினிகாந்த் மட்டுமின்றி விஜய், அஜித், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களை வைத்தும் பாபி படங்களை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகளும், அடுத்தடுத்த சந்திப்புகளும் விரைவில் நடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகமொத்தம் பாபி முழு மூச்சாக இறங்கிவிட்டால் கோலிவுட் தயாரிப்பு களம் கார்ப்பரேட் கம்பெனிகளின் போர்க்களமாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











