Sivaji Ganesan - தேவர் மகனின் அந்த சீன்.. சிவாஜி செய்த தரமான சம்பவம் தெரியுமா?
சென்னை: Sivaji Ganesan Memorial Day (சிவாஜி கணேசன் நினைவு நாள்) நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் 22ஆவது நினைவு தினம் இன்று
இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம், செவாலியே என ரசிகர்களால் போற்றப்படுபவர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன். அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி யார் நடிக்க வந்தாலும் அவர்களின் ஆதர்ச ஹீரோவாக இருப்பவர் சிவாஜி கணேசன் மட்டுமே.

பராசக்தி ஹீரோ: கோலிவுட்டின் முகத்தை மாற்றிய படம் பராசக்தி. கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதிய அந்தப் படத்தின் மூலம்தான் சிவாஜி கணேசன் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்தப் படத்தின் சிவாஜியை தவிர வேறு யார் அறிமுகமாகியிருந்தாலும் அதில் உள்ள வெயிட்டேஜை தாங்கியிருப்பார்களா என்பது சந்தேகமே. ஏனெனில் அனல் பறந்த கருணாநிதியின் வசனத்தை அடுத்தக்கட்டத்துக்கு சிவாஜி மட்டுமே எடுத்து சென்றார். முதல் படத்திலேயே அப்படி காட்சிகளும், வசனங்களும் அமைவது வரம். அது சிவாஜிக்கு கைகூடியது.
சிவாஜிதான் அடையாளம்: மன்னர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள பலருக்கும் ஆர்வம் இருப்பது உண்டு. ஆனால் யாரும் நேரில் பார்த்ததில்லை. சினிமாதான் அவர்களை அடையாளப்படுத்தியிருக்கிறது. அப்படி பலர் மன்னர்களாக நடித்தாலும் சிவாஜிதான் மன்னர்களுக்கு அடையாளமாக இருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் என யாரை நினைத்தாலும் சிவாஜிதான் ரசிகர்கள் கண் முன்பு வந்து செல்வார்கள்.
கட்டுப்படுத்திய மகேந்திரன்: சிவாஜி போல் ஒரு நடிகர் இனி எங்குமே கிடைக்கமாட்டார். அது பெரும்பாலும் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்வார் என்ற விமர்சனமும் எழுந்தது உண்டு. அதற்கு இயக்குநர் மகேந்திரன் இப்படி பதில் சொன்னார், ""சிவாஜியை ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்கள். நான் அப்படி சொல்லமாட்டேன் சிவாஜி கணேசனின் நடிப்புக்கு ஏற்ற கதையை இதுவரை யாருமே எழுதியதில்லை. "".
தங்கப்பதக்கம் படத்தின் கதையும், வசனமும் மகேந்திரனுடையது. அதில் இறந்து கிடக்கும் தனது மனைவியை சிவாஜி கணேசன் பார்க்க செல்லும்போதும், பார்த்த பின்பு பேசும் வசனத்திலும் ஓவர் ஆக்டிங் சிவாஜி தெரியமாட்டார். எதார்த்தமான நடிப்பு கொண்ட சிவாஜியே தெரிவார். ஆக மகேந்திரன் சொன்னதுபோல், சிவாஜி வேண்டுமென்றே ஓவர் ஆக்டிங் செய்யவில்லை. சாதாரண சீனை தனது நடிப்பால் மெருகேற்ற நினைத்து செய்த நடிப்பைத்தான் இங்கு பலர் ஓவர் ஆக்டிங் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
கேரக்டர் ஆர்ட்டிஸ்: அதற்கு உதாரணமாக சிவாஜி கணேசன் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிய பின்பு அவரது நடிப்பை பார்த்தால் புரியும். படையப்பா, தேவர் மகன், ஒன்ஸ்மோர், பூப்பறிக்க வருகிறோம் என அவர் குணச்சித்திர நடிகராக தோன்றிய படங்களில் ஒரு சீனில்கூட மிகை நடிப்பு இருக்காது. அதுதான் ஒரிஜினல் சிவாஜி கணேசன். அவர் விரும்பியதையும் அதைத்தான் என்பதை எளிதாக உணர்ந்துகொள்ளலாம்.
தேவர் மகனில் சிவாஜி செய்த சம்பவம்: உதாரணமாக தேவர் மகன் படத்தை எடுத்துக்கொள்ளலாம். அதில் கௌதமியிடம் பேசும்போது, நம்ம ஊருல எவண்டா ஹோட்டலுல சாப்பிடுறான், அவுக சொல்றாகல அத கேட்டா குறைஞ்சு போயிடுவிகளா என கமலிடம் கோபப்படுவது என்று பல காட்சிகளில் எதார்த்தமான சிவாஜி கணேசனே எட்டி பார்ப்பார்,.
அந்த சீனில் இப்படித்தான் நடித்தார்: அதேபோல் தேவர் மகன் படத்தில் முக்கியமான காட்சிகளில் ஒன்று பஞ்சாயத்து சீன். அந்த சீனுக்காக ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் சொன்னதும் சிவாஜி ஸ்க்ரிப்ட்டில் இருந்தபடி நடித்துக்கொண்டிருந்திருக்கிறார். நாசரால் பஞ்சாயத்தில் சலசலப்பு எழும்போது கோபமாக சிவாஜி கணேசன் வந்து காரில் ஏற வேண்டும். அதுதான் கமல் ஹாசனும், பரதனும் யோசித்து வைத்திருந்த சீன். ஆனால் சிவாஜியோ அந்த கோபத்தோடு வந்து காரின் கதவை ஓங்கி சாத்திவிட்டு கார் ஒன்னுதான் குறைச்சல் என சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்துவிடுவார்.
சிவாஜியின் ஐடியா: டேக்கில் காரின் கதவை சாத்திவிட்டு சிவாஜி சென்றதும் என்ன செய்வதென்று தெரியாத் கமல் கொஞ்ச தூரம் நடந்து போன பிறகு இது ஸ்க்ரிப்ட்டில் இல்லை நீங்கள் காரில் ஏறுவதுதான் ஸ்க்ரிப்ட்டில் இருக்கிறது என்றிருக்கிறார். அதற்கு சிவாஜியோ; கமலா (கமலை சிவாஜி அப்படித்தான் அழைப்பார்) ஒருவன் அசிங்கப்பட்டு உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும்போது மானமே போச்சு கார் ஒன்னுதான் குறைச்சலா என்ற எண்ணம்தான் அவனுக்கு தோன்றும். அதைத்தான் செய்திருக்கிறேன் என சொல்லியிருக்கிறார். சிவாஜி சொன்னது சரி என கமலுக்கு பட அந்த சீனையே ஓகே செய்து படத்தில் வைத்திருக்கிறார்.
அதேபோல் சிவாஜி இறக்கும்போது வடிவேலுவும், சங்கிலி முருகனும் ரொம்பவே அழுதுகொண்டிருக்க அவர்களை அதட்டி, கமல்தாண்டா எனக்கு புள்ள. என்னமோ நீங்க எனக்கு புள்ளைக மாதிரி இந்த கதறு கதறுறீங்க. சத்தம் வராம நடிக்கணும் என சொல்லியிருக்கிறார். இப்படி சிவாஜி கணேசன் தனது நடிப்பில் மட்டுமின்றி பிறரின் நடிப்பிலும் எதார்த்தத்தை தேடியவர். அந்த மகா நடிகனை பெருமையோடு நினைவுகூர்கிறது தமிழ் ஃபில்மிபீட்


Click it and Unblock the Notifications











