காமெடி நடிகர்களுக்கு ஜோடியா நடிக்க ஹீரோயின்கள் ஒத்துக்கிறதில்ல- விவேக்

ஏபி.சி. ட்ரீம்ஸ் எண்டர்டெய்னர்ஸ் நிறுவனம் சார்பில் பஷீர் குருவண்ணா தயாரிக்கும் படம் 'பாலக்காட்டு மாதவன்'..
இந்தப் படத்தில் ஹீரோவா நடிக்கிறார் விவேக். சந்திமோஹன் கதை எழுதி இயக்குகிறார். சோனியா அகர்வால், 'செம்மீன்' ஷீலா, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு அஜ்மல் அஜிஸ் இசையமைக்கிறார்..
பாலக்காட்டு மாதவன் என்ற பாத்திரத்தை உருவாக்கிய இயக்குநர் கே பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் அறிமுக விழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்டு நடிகர் விவேக் பேசியதாவது:
"பொதுவா என்ன மாதிரி நகைச்சுவை நடிகர் என்றாலே தேனி குஞ்சாரம்மா, பறவை முனியம்மா, இல்லன்னா பல்லு போன பாட்டிகள் போன்றவர்கள்தான் ஜோடியாக நடிப்பாங்க. ஆனால் 'பாலக்காட்டு மாதவன்' படத்தில் முதலில் செம்மீன் ஷீலா நடிப்பதாக சொன்னாங்க. இவுங்கதான் நம்ம ஜோடின்னு நினைச்சேன்.
பிறகு சோனியா அகர்வால் நடிக்கிறாங்கன்னு சொன்னாங்க. அவுங்க ஏதோ முக்கியமான வேடத்துல நடிக்கிறாங்கன்னு நினைச்சேன்.. பிறகு அவுங்கதான் ஜோடின்னு சொன்னாங்க. எனக்கு பெரிய இன்ப அதிர்ச்சியா இருந்தது. அவுங்க எனக்கு ஜோடியா நடிக்க ஒத்துக்கிட்டாங்கடன்னா அதுக்கு என்ன காரணம்னு யோசிச்சேன்.. அது இந்தப் படத்தோட கதை. அப்புறம் படத்தோட கிளைமாக்ஸ்.
பொதுவா காமெடி நடிகர்களுக்கு ஜோடியா நடிக்க எல்லா கதாநாயகிகளும் ஒத்துக்க மாட்டாங்க. இது சினிமா உலகில் தவிர்க்க முடியாத விஷயம். இதை தப்புன்னு சொல்ல முடியாது. சினிமா உலகின் டிரண்ட் அப்படி.. இது சகஜம்தான். இதையும் தாண்டி அவுங்க நடிக்க ஒத்துக்கிட்டாங்கன்னா கதைதான் படத்தோட ஹீரோ.
'செம்மீன்' ஷீலா பேசும் போது குறிப்பிட்டாங்க. இந்தப் படத்துல என் கூட நடிப்பது பெருமையா இருக்குன்னு. ஆனா அவுங்க கூட நடிப்பதுல எனக்குத்தான் பெருமை. தென்னிந்திய மொழிகளில் 400 படத்துக்கு மேல நடிச்சு நடிப்புல சாதனை பண்ணவங்க.
திரைக்கதை மன்னன் பாக்யராஜ்
இந்திய திரையுலகில் திரைக்கதை மன்னன்னா, அதுல முதலில் இருப்பவர் இயக்குநர் கே.பாக்யராஜ். அவர் நடித்த 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர்தான் 'பாலக்காட்டு மாதவன்'. அந்தப் பெயரில், அவர் ஏற்று நடித்த பாத்திரத்தில் நடிக்கிறது எனக்கு பெருமையா இருக்கு. அவரும் இந்தப் படத்துல நடிக்க ஒத்துக்கிட்டு இருப்பது மகிழ்ச்சியா இருக்குது. அவர் திரைக்கதையை மெருகேத்தும் பணியில் ஈடுபடுவார் என நம்புகிறேன்."
இவ்வாறு நடிகர் விவேக் பேசினார்.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகை சோனியா அகர்வால், ஷீலா போன்றவர்களும் பேசினார்கள். முன்னதாக தயாரிப்பாளர் பஷீர் குருவண்ணா வரவேற்றார். இயக்குநர் சந்திரமோஹன் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை இயக்குநனர் பாலு மலர்வண்ணன் தொகுத்து வழங்கினார்.


Click it and Unblock the Notifications











