ஹீரோயிசம்...அம்பேதகர் விருதுபெற்ற ஜெய் பீம் ரோல் மாடல்... சந்துரு பற்றி நடிகர் சூர்யா சொன்ன வார்த்தை
உண்மையான ஹீரோயிசம் என்பதை, நமக்குப் பக்கத்தில் இருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு போன்ற சாதனை நாயகர்கள் வழியேதான் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அதற்காவே அவரது வாழ்க்கையைக் காட்டவேண்டும் என்று நினைத்தோம் என ஜெய் பீம் படம் பற்றி சூர்யா குறிப்பிட்டு நீதிபதி சந்துருவை உண்மையாக ஹீரோ என பாராட்டியிருந்தார். அவரது கூற்றுப்படியே உண்மையான ஹீரோ சந்துருவுக்கு அம்பேத்கர் விருதை அரசு அறிவித்துள்ளது.
ஓய்வுப்பெற்ற நீதிபதி சந்துருவுக்கு அம்பேத்கர் விருதை அரசு அறிவித்துள்ளது. அவரது சட்டப்போராட்டத்தை மூலக்கருவாக வைத்து ஜெய் பீம் என்கிற வெற்றிப்படத்தை தயாரித்து நடித்த நடிகர் சூர்யா, படம் எடுக்கப்பட்டதன் நோக்கத்தை விளக்கி நிஜ ஹீரோ சந்துரு சார் என பேட்டி அளித்திருந்தார். தற்போது அவருக்கு அரசு அம்பேத்கர் விருது வழங்கியதன் மூலம் அது அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் படம் வெளியான தருணத்தில் சந்துரு குறித்த சூர்யாவின் பழைய பேட்டி கீழே.

அடடா 1 லட்சம் வழக்குகளில் தீர்ப்பு - சூர்யா
"ஒரு வழக்கறிஞர், அல்லது நீதிபதி, தங்களுடைய வாழ்நாளில் அதிகபட்சமாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வழக்குகளில் பங்கெடுத்து அவற்றை முடித்து வைக்கிறார்கள். ஆனால், நம்முடைய பெருமைகளில் ஒருவரான நீதிபதி கே. சந்துரு, 1 லட்சம் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இது ஏதோ ஒரு புள்ளிவிவரம் அல்ல. நீதிமன்ற வரலாற்றில் இது அசாதாரணமான சாதனை.

தீர்ப்புகளில் அம்பேத்கரின் கருத்துகளை மேற்கோள்காட்டிய நீதிபதி சந்துரு
சமூக நீதியும் சமத்துவமும் எளிய மக்களிடமிருந்து எப்படி விலக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதை அம்பேத்கரின் கருத்துகளோடு மேற்கோள் காட்டித் தன்னுடைய பல தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார் சந்துரு. அந்தத் தீர்ப்புகள் ஆயிரக் கணக்கானவர்களின் வாழ்க்கையில் விடிவையும் வெளிச்சத்தையும் கொண்டுவந்திருக்கின்றன. சினிமாவில் நாம் ஹீரோயிசத்தைப் பார்த்திருப்போம்.

உண்மையான ஹீரோ சந்துரு- சூர்யா
ஆனால், உண்மையான ஹீரோயிசம் என்பதை, நமக்குப் பக்கத்தில் இருக்கும் சந்துரு போன்ற சாதனை நாயகர்கள் வழியேதான் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அதற்காவே அவரது வாழ்க்கையைக் காட்டவேண்டும் என்று நினைத்தோம். அதற்கு அவர் அனுமதி அளித்தது எங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் என்றே நினைக்கிறேன்.அவருடைய சட்டப் போராட்ட வாழ்க்கையில் ஒரு வழக்கை மட்டும் முன்னிலைப்படுத்தும் அதேநேரம், தனியொரு மனிதராக சட்டதை அவர் எவ்வாறு ஆயுதமாக்கினார் என்பதை எடுத்துக்காட்டும் உண்மையின் வரலாறு.

எதை வெளிக்கொணர ’ஜெய் பீம்’ திரைப்படம் ஏன் எடுக்கப்பட்டது- சூர்யா
இது 90-களில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம். காவல்துறையால் அநீதி இழைக்கப்பட்ட ஒரு பழங்குடியினப் பெண்ணுக்கு அவருடைய தொலைந்துபோன வாழ்க்கையை சட்டத்தின் வழியாக சந்துரு எப்படி மீட்டெடுத்துக் கொடுக்கிறார் என்பதே கதை. இந்தக் கதையை நாங்கள் எடுத்துக்கொண்டதற்கு காரணம், ஐயா சந்துருவின் முன்மாதிரி நீதிமன்ற வாழ்க்கையைக் காட்டுவதற்கு மட்டுமல்ல, ஒரு சாமானியப் பழங்குடியினப் பெண்ணுக்கு என்ன நடந்தது? மாநிலத்தின் தலைநகரிலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் வாழும் அப்பெண்ணுக்கு, நீதிமன்றம் செல்வதும் சட்டப்போராட்டம் நடந்துவதும் எவ்வளவு எட்டாத உயரத்தில் இருக்கிறது? முன்பின் அறிமுகமில்லாத ஓர் ஏழை, எளிய பெண்ணுக்காகப் போராட ஒருவர் இறுதிவரை எப்படி உறுதியாக நின்றிருக்கிறார் என்பதைச் சொல்லும் படம்.
Recommended Video

அநீதியின்போது அமைதி காப்பது சரியல்ல-சூர்யா
அநீதி இழைக்கப்படும்போது அமைதி காப்பது மிக அவலமானது. அந்த அமைதியை உடைத்தெறிந்து ஒருவர் குரல்கொடுக்கும்போது அது என்ன மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்பதை ‘ஜெய் பீம்' சொல்லும்". என அப்போது சூர்யா தனது பேட்டியில் நீதிபதி சந்துருவின் சட்டப்போராட்டம் எளிய மக்களுக்கு நீதியைப்பெற்றுத் தந்ததை குறிப்பிட்டிருப்பார். தற்போது அவருக்கு அம்பேத்கர் விருதை அரசு அறிவித்துள்ளது. சூர்யா குறிப்பிட்ட தகுதியான மனிதருக்கு அது கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











