தைரியமான கதை, வசனங்கள்... கத்தியின் கூர்மை பக்கம்
சென்னை: கத்தி திரைப்படம் மெதுவாக நகர்கிறது, கார்பொரேட் நிறுவன தயாரிப்பில் படத்தை உருவாக்கிக் கொண்டு கார்பொரேட் நிறுவனங்களை எதிர்ப்பது நியாயமா என்று ஒருபக்கம் விமர்சனங்கள் இருந்தாலும், கத்தியில் சொல்லிக் கொள்ளும்படியான நல்ல விஷயங்களும் இருக்கவே செய்கின்றன. கத்தியின் பாசிட்டிவ் பக்கம் குறித்தும் பார்க்கலாமா.
விஜய் நடித்து தீபாவளிக்கு ரீலீஸ் ஆகியுள்ள கத்தி திரைப்படத்தை பொறுத்தளவில் லைகா நிறுவனம் அதை தயாரித்துள்ளது. அதே நேரம். லைகா, ராஜபக்ஷேவுக்கு ஆதரவான நிறுவனமா இல்லையா என்பதிலேயே இன்னும் சர்ச்சை நிலவுவதால் அது குறித்து பிறகு பார்க்கலாம்.

தைரியமான முடிவு
கத்தி என்ற படத்தை திரைப்படமாக மட்டுமே பார்த்தால் அதில் பாராட்டத்தக்க பல அம்சங்கள் உள்ளன. முதலில் முருகதாஸ் போன்ற முன்னணி இயக்குநரும், விஜய் போன்ற முன்னணி ஹீரோவும் இணைந்து இதுபோன்ற தைரியமான ஒரு கதைக் கருவை கையில் எடுத்ததற்காக பாராட்டலாம்.

வசனத்தில் கூர்மை
நிலத்தடி நீரை உறிஞ்சும் பன்னாட்டு குளிர்பான ஆலையிடமிருந்து மக்களை காப்பாற்றும் விஜய் கதாப்பாத்திரம் பேசும் ஒவ்வொரு வசனமும் தியேட்டரில் கை தட்டலை அள்ளுகிறது... விஜய் ரசிகர்கள் அல்லாதோரிடமிருந்தும். வசனத்தின் இந்த கூர்மைக்காகத்தான் கத்தி என்று பெயரிட்டார்களோ என்ற எண்ணம் படத்தை பார்ப்போருக்கு எழுவது நிச்சயம்.

மாஸ் ஹீரோவின் மாடுலேஷன்
கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக புலம்பல் ஒலி எழும் தமிழகத்தில், பன்னாட்டு நிறுவனங்கள் குறித்தும், ஊடகங்களின் சென்ஷேஷனல் செய்தி தாகம் குறித்தும், 2ஜி ஊழல் குறித்தும் விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோ சரியான மாடுலேஷனுடன் பேசும் வசனங்கள் கண்டிப்பாக மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி, விழிப்புணர்வை உருவாக்கும் என்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

கோலா ஆலை மட்டும்தானா?
கத்தியில் காண்பிக்கப்படும் கோலா ஆலை என்பது ஒரு உருவகமே தவிர, அது மட்டுமே எதிர்க்கப்பட வேண்டியது கிடையாது. கோலா ஆலை என்ற இடத்தில், நெல்லை மாவட்டத்து தாது மணல் கொள்ளை நிறுவனத்தையோ, மக்களை விரட்டிவிட்டு அமைக்கப்படும் அணு உலைகளையோ கூட கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். இதோபோல, அவரவர் பகுதிகளில் அதிகார வர்க்கத்தால் நிகழும் அவலங்களை, கத்தியின் கதையுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் உதாரணங்கள் ஏராளம் உள்ளன.

படைப்பாளி முருகதாஸ்தான்
ஒரு படைப்பாளிக்கு மட்டுமே படைப்பில் முழு உரிமை உள்ளது. அந்த வகையில் கத்தியின் படைப்பாளி முருகதாஸ்தானே தவிர, விஜய் கிடையாது. கோக்கில் விஜய் நடித்ததும் நடிப்புதான், கத்தியும் நடிப்புதான். இரண்டின் படைப்பாளிகளும் வேறுவேறாகும். ஆனால் மாஸ் ஹீரோவான விஜய் படத்தை பார்க்க மக்கள் அதிகம் வருவார்கள். எனவே அவர் கூறும் கருத்துக்களின் வீச்சு அதிக மக்களை சென்றடையும் என்பதற்காக முருகதாஸ் விஜயை இந்த பாத்திரத்துக்கு தேர்வு செய்திருக்கலாம். இதுபோன்ற படங்களுக்கு ஊக்கம் அளித்தால்தான், நாளை வேறு இயக்குநர்-நடிகர்களுக்கும் இந்த தைரியம் வரும்.

விஜய்க்கு கோரிக்கை வையுங்களேன்
விஜய் ரசிகர்களும், ரசிகர் அல்லாதோரும், இந்த உண்மையை புரிந்து கொண்டு, "கத்தி படத்தில் நடித்ததன் மூலம், விவசாயிகளின் கஷ்டத்தை தெரிந்திருப்பீர்கள், இனிமேல் பன்னாட்டு நிறுவன விளம்பரங்களில் நடிக்க வேண்டாமே" என்று விஜய்க்கு அன்பாக கோரிக்கை வைக்கலாம். அதிலும் முடிவெடுக்க வேண்டிய முழு உரிமை விஜய்க்கு மட்டுமே உள்ளது.
திருடன் போலீசாக நடிக்க முடியாது
விஜய்க்கு எதிரான இந்த வாதத்தை வளர்த்துவிட்டால், ஒரு படத்தில் திருடனாக நடித்த ஒரு நடிகர், அடுத்த படத்தில் போலீசாக நடிக்க கூடாது என்றும் நாளைக்கு சொல்வார்கள். போன படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்தவர் இந்த படத்தில் எப்படி எகிறி குதித்து சண்டை போடலாம் என்றும் கூறுவார்கள்.
சிவாஜி இறந்துட்டாரா?
பாசமலரில் இறந்த சிவாஜி, படையப்பாவில் எப்படி நடித்தார்?. இறந்தது நடிப்பு என்பதால்தான் இது சாத்தியமாயிற்று. ஆனால் பாசமலர் வந்த காலகட்டத்தில் கிராம மக்கள் எப்படி பேசிக்கொண்டார்கள் தெரியுமா, "சிவாஜி இறந்துவிட்டதற்காக, அவரது குடும்பத்தாருக்கு படக்குழுவினர் நிறைய பணம் கொடுத்துவிட்டார்களாம்" என்றுதான் பேசிக்கொண்டனர். சினிமா குறித்த விவரம் இல்லாத காலகட்டம் அது. ஆனால் இந்த கணினி யுகத்திலும் நமது ரசிகர்கள் அதேபோல இருப்பது வேதனையே.


Click it and Unblock the Notifications











