இந்தியன் 2 விவகாரம்.. ஷங்கருக்கு எதிராக லைகா வழக்கு.. அதிரடி காட்டிய சென்னை உயர்நீதிமன்றம்!
சென்னை: இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களை இயக்க கூடாது என இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நடிகர் கமல் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.
இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏகப்பட்ட காரணங்களுக்காக தாமதமாகி வருகிறது.

லைகா வழக்கு
இந்நிலையில் லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

236 கோடி செலவு
படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தின் மீதம் உள்ள பகுதிகளை முடித்து தர வேண்டுமென ஷங்கருக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஷங்கருக்கு 40 கோடி
இயக்குனர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசிய நிலையில் இதுவரை 14 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் லைக்காவின் மனுவில் தெரிவிக்கப்பட்டு மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயாராக இருப்பதாகவும் மனுவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

கமல் அரசியலில் பிசி
கடந்த ஆண்டு இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த கோர விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். அதன் பிறகு தான் ஏகப்பட்ட பிரச்சனைகள் கிளம்பின. நடிகர் கமல் பிக் பாஸ், விக்ரம், அரசியல் என இந்தியன் 2 படத்தை விட்டு விலகி வேறு பல வேலைகளில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

ராம்சரணை வைத்து
நீண்ட காலம் காத்திருந்து பார்த்த ஷங்கர் கடைசியாக டோலிவுட் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் நடிகர் ராம்சரணை வைத்து பிரம்மாண்டமாக பான் இந்தியா திரைப்படம் ஒன்றை இயக்கப் போவதாக அறிவித்தார். இந்நிலையில், தான் லைகாவுக்கும் ஷங்கருக்கும் பயங்கரமாக முட்டிக் கொண்டது.

ஷங்கருக்கு தடையில்லை
இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் சங்கரின் விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, பிற படங்களை இயக்க கூடாது என ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டார். வழக்கு குறித்து இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











