மீண்டும் சிக்கல்.. நெஞ்சம் மறப்பதில்லை படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி!
சென்னை: செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வருகிற மார்ச் 5ம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப் படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது.

மீண்டும் சிக்கல்
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். ஆனால், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரேடியன்ஸ் மீடியா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

என்ன பிரச்சனை
அந்த மனுவில், என்னை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக எஸ்க்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் ரூபாய் 2 கோடியே 42 லட்சம் கடன் வாங்கியதாகவும், படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1கோடியே 75 லட்சம் ரூபாய் கடனை கொடுத்துவிட்டதாகவும், மீதமுள்ள 1 கோடியே 24 லட்சம் ரூபாயை திரும்ப கொடுக்காமல் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பணம் கொடுக்காமல்
மேலும், தங்கள் நிறுவனத்துக்கு தர வேண்டிய மீதமுள்ள தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்த படம் இப்போதாவது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் படத்திற்கு மீண்டும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











