தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஜூன் 30ம் தேதிக்குள் தேர்தல்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
சென்னை: தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரும் ஜூன் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷாலின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் சங்கத்தில் முறைகேடுகள் நடத்திருப்பதாக உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க சங்க பதிவு துறையின் அதிகாரி சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்தது.
கடந்த ஒரு வருடமாக தேர்தல் நடத்தப்படாத நிலையில் தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்து ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் தேர்தல் நடத்த வேண்டும் விஷால் தரப்பிலும், ராதாகிருஷ்ணன் என்ற சங்க உறுப்பினர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு இன்று வந்தது. இந்நிலையில் சிறப்பு அதிகாரியாக மஞ்சுளா என்பவரை நியமித்திருப்பதாகவும் அவர் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்துவார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நடிகர் விஷால் தரப்பில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரியை வைத்து தேர்தல் நடத்த கூடாது என்றும் ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது
தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடந்த 4 முறை நடத்தப்பட்ட தேர்தல்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகளே நடத்தி முடித்துள்ளனர் என குறிப்பிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை வரும் ஜூன் மாதம் 30 ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிப்பதாகவும், அவருக்கு உதவ இரு நபர்களை நியமிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவர்கள் யார் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்ட நீதிபதி, தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படும் ஓய்வு பெற்ற நீதிபதிக்கு சம்பளமாக 3 லட்ச ரூபாயை தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரி வழங்க வேண்டும்
Recommended Video
தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது குறித்த விவரங்களை ஓய்வு பெற்ற நீதிபதி ஜூலை30 ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











