சேரன் மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கமிஷனருக்கு உத்தரவு!

காதல் பிரச்சினையில் சிக்கியுள்ள தாமினி மயிலாப்பூர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தாமினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, தாமினியின் காதலன் சந்துருவின் தாயார் ஈஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி கேட்டுக்கொண்ட ஈஸ்வரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, "தாமினியை காதலித்த வாலிபர் சந்துருவை அடி ஆட்களை அனுப்பி கொலை செய்துவிடுவதாக திரைப்பட இயக்குனர் சேரன் மிரட்டியுள்ளார். இது குறித்து தாமினி கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை என்ற பெயரில் அவரை காப்பகத்தில் அடைத்து வைத்துள்ளனர். எனவே, இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும். திருமண வயது வந்த பெண்ணை பலவந்தமாக இப்பசி அடைத்து வைத்துள்ளது தவறு," என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், ஈஸ்வரி தாக்கல் செய்த மனு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், பிற்பகல் அந்த மனு விசாரிக்கப்படும் என்றும் அறிவித்தனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது இயக்குனர் சேரன் மகள் தாமினியை நீதிமன்றத்தில் போலீசார் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தாமினி புகாரின் பேரில் சேரன், சந்துரு இருவர் மீதுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











