Actress Sulochana: பழம்பெரும் நடிகை சுலோச்சனா காலமானார்... பிரதமர் முதல் பிரபலங்கள் வரை இரங்கல்
மும்பை: பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 94.
இந்தி, மராத்தி மொழி படங்களில் நடித்து புகழ்ப் பெற்றவர் சுலோச்சனா லட்கர்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுலோச்சனா நேற்று மாலை உயிரிழந்தார்.
இதனையடுத்து நடிகை சுலோச்சனா மறைவுக்கு பிரதமர் மோடி முதல் பிரபலங்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகை சுலோச்சனா காலமானார்:மராத்தி சினிமா உலகின் தாய் என்று அழைக்கப்படுபவர் சுலோச்சனா லட்கர். 1946ம் ஆண்டு மராத்தி திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சுலோச்சனா. முதலில் மராத்தி மொழி படங்களில் மட்டும் நடித்து வந்த அவர், பின்னர் இந்தி திரையுலகிலும் தடம் பதிக்கத் தொடங்கினார். அதன்படி, இரண்டு மொழிகளிலும் சேர்த்து இதுவரை 300 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

திரையுலகில் சுலோச்சனா செய்த சாதனைகளை பாராட்டி அவருக்கு மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கப்பட்டது. அதேபோல், மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் சம்மி கபூர், திலீப் குமார். தேவ் ஆனந்த், வினோத் கண்ணா, ஜாக்கி ஷெராப் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நடிகை சுலோச்சனா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வயது மூப்பு காரணமாக மூச்சு விடுவதில் அவருக்கு பிரச்சினை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுலோச்சனா நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
நடிகை சுலோச்சனாவின் இறுதிச் சடங்கு இன்று (ஜூன் 5) மாலை 5.30 மணிக்கு தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடிகை சுலோச்சனாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, நடிகை மாதூரி தீட்சித் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மராத்தி சினிமாவின் தாய் என்றழைக்கப்பட்ட சுலோச்சனா உயிரிழந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











