அபிஷேகம் செய்வதையும் ஆகமவிதிகளையும் கொச்சைப்படுத்துவதா? விஜய் சேதுபதி மீது இந்து மகா சபா புகார்!
சென்னை: அபிஷேகம் செய்வதையும் ஆகமவிதிகளையும் கொச்சைப்படுத்தி பேசிய நடிகர் விஜய் சேதுபதி மீது இந்து மகா சபா சார்பில் திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நடிகர் விஜய் சேதுபதி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை சாடும் வகையில் பேசி வருகிறார் என அவர் மீது விமர்சனம் எழுந்து வருகிறது.
இந்நிலையில் கோவில்களில் அபிஷேகம் செய்யப்படுவதை இழிவுப்படுத்தும் வகையில் விஜய் சேதுபதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் இந்து மகா சபை அவர் திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

இழிவுப்படுத்தும் வகையில்
அந்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது, தற்போது சமூக வலைதளங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 17.03.2019 அன்று ஒளிபரப்பப்பட்ட நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள், இந்து கோயில்களில் தெய்வங்களுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் விதமாக தெய்வங்கள் குளிப்பதை எல்லோருக்கும் காட்டத் தெரிந்தவர்களுக்கு ஏன் தெய்வங்களுக்கு உடைமாற்றும் நிகழ்வை காட்டக் கூடாது என்று ஒரு சிறுமி தனது தாத்தாவிடம் கேட்டதைப் போல கற்பனையாக சொல்லுவது இந்து மதத்தினையும், அதன் வழிபாட்டு முறைகளையும் மற்றும் இந்து கோயில்களில் நடக்கும் ஆகம விதி நடைமுறைகளையும் கேவலப்படுத்தி இந்துக்களின் மனதையும், நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளார்.

இந்து மதம்தான் கிடைத்ததா?
அந்நிகழ்ச்சியின் நோக்கமே குறைந்த தண்ணீரில் குளிப்பது எப்படி? என்று காட்டுவதற்கான நிகழ்ச்சியாக அமையப் பெற்றுள்ளது. அதில் இந்து மதக் கோயில்க்ளின் அபிஷேக, அலங்கார முறைகளைப் பற்றிக் கூற காரணம் என்ன? இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதம் தான் கிடைத்ததா?

இந்து மகா சபா
ஆகையால் விஜய் சேதுபதி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்துக்களின் உணர்வை மதித்து விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய மகா சபை கேட்டுக் கொள்கிறது" இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடமாக அமைய வேண்டும்
குறிப்பு: இதுபோன்று தங்களை விளம்பரபடுத்திக்கொள்ள இந்து மதத்தினைக் கையிலெடுக்கும் திரைப்படத்துறையினர் மற்றும் பிற மதத்தவர்களுக்கு தங்களது நடவடிக்கை ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று அகில இந்திய இந்து மகா சபா வலியுறுத்துகிறது". இவ்வாறு அந்த அறிக்கையில் இந்து மகா சபா தெரிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











