கார் விபத்து வழக்கு.. சல்மான் கானை அடையாளம் காட்டிய சாட்சிகள்!
மும்பை: நடிகர் சல்மான்கான் கார் விபத்தில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், அரசு தரப்பு சாட்சிகள் அவரை அடையாளம் காட்டின.
கடந்த 2002 ஆம் ஆண்டு மும்பை பாந்திராவில் நள்ளிரவு குடித்துவிட்டு வேகமாக கார் ஓட்டிசென்று விபத்தை ஏற்படுத்தினார் சல்மான்கான். இதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

64 சாட்சிகள்
இது தொடர்பான வழக்கு விசாரணை மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கில் 64 பேரை போலீசார் சாட்சிகளாகக் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

வாகனத்தை ஓட்டியவர் சல்மான்தான்
இந்த நிலையில், விபத்தில் காயம் அடைந்த ஒருவர் சாட்சியம் அளித்த போது, டோயட்டா லேண்ட் க்ருஸர் காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்து சல்மான்கான் வெளியே வந்தார் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன் வரை சல்மான்கானின் வழக்கறிஞர் அவர் வாகனத்தை ஓட்டவில்லை என்றே வாதாடினார்.

அடையாளம்
சல்மான்கான் தான் காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தியதாக இரண்டு அரசு தரப்பு சாட்சியங்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். சல்மானை அவர்கள் அடையாளமும் காட்டினர்.
இந்த நேரடி சாட்சிகள் சல்மானுக்கு இந்த வழக்கில் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

மிரட்டல்
இதற்கிடையே, சல்மான்கானை அடையாளம் காட்டிய சாட்சிகளில் ஒருவருக்கு மர்ம நபர் மூலம் அச்சுறுத்தல் வந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.
அந்த சாட்சியின் பெயர் முஸ்லிம் ஷேக். இரண்டு முறை பேசிய அந்த மர்ம நபர், ரூ 5 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு சாட்சி சொல்லாமல் விலகிவிடுமாறு எச்சரித்தாராம்.


Click it and Unblock the Notifications











