பார்த்திபனின் 'சிவ சிவா' பேச்சுக்கு கண்டனம்... இந்து மக்கள் கட்சி போராட்ட அறிவிப்பு!

தில்லுமுல்லு படத்தின் ரீமேக்கில் நடிகர் சிவா, நடிகை இஷா தல்வார் ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட நடிகர்-இயக்குநர் பார்த்திபன் வழக்கம் போல நக்கல் நையாண்டியுடன் பேசினார். அவர் பேசுகையில், சிவாவை விட புதுமுக நாயகி இஷா தல்வார் அழகாக இருக்கிறார். இதுமாதிரி ஒரு கதாநாயகி கிடைத்தால் சிவனே பார்வதியை தள்ளி வைத்து விட்டு ஒரு டூயட் பாடலை பாடி விட்டு வருவார் என்று பேசியிருந்தார்.
இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.ஆர். குமார் என்பவர் இதுதொடர்பாக கூறுகையில்,
நடிகர் பார்த்திபன் பட விழாக்களில் கதாநாயகிகளை கவர்ச்சியாக புகழ்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் பேச்சை நடிகைகளின் அம்மா, அப்பா, அண்ணன், தம்பிகள் எந்த அளவு ரசிப்பார்கள் என்பதை உணர்வது இல்லை. அதற்குள் நாங்கள் போகவும் விரும்பவில்லை.
ஆனால் கோடிக்கணக்கான இந்துக்களின் கடவுளான சிவன், நடிகையுடன் டூயட் பாட வருவார் என்று பேசி இருப்பது வரம்பு மீறிய செயல். இந்துக்கள் மனதை பார்த்திபன் புண்புடுத்தி உள்ளார்.
வேறு மதங்களின் கடவுள்கள் பற்றி இதுபோல் அவரால் பேச முடியுமா? பார்த்திபன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.
ஏம்ப்பா இப்படி வாய் மீறிப் பேசி வம்பை விலை கொடுத்து வாங்குறீங்க...


Click it and Unblock the Notifications











