ஒரு விபத்து.. ஜனகராஜின் வாழ்க்கையையே இப்படி மாற்றிவிட்டதே?.. சிரிப்புக்கு பின் இருக்கும் வலி தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி மற்றும் குணசித்திர நடிகர்களில் ஒருவர் ஜனகராஜ். 80கள், 90களில் ஏகப்பட்ட படங்களில் நடித்து தனது திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இப்போது வயோதிகம் காரணமாக அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தாலும்; தொலைக்காட்சிகளின் பல சேனல்களில் அவரது படங்களும், காமெடி சீன்களும்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. கடைசியாக அவர் தமிழில் 96, ஒபாமா உங்களுக்காக உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு கேரக்டரை ஏற்றிருந்தார்.
அரசாங்க வேலையில் இருந்த ஜனகராஜ் சினிமா மீது இருந்த ஆசையால் பாரதிராஜாவிடம் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் உதவியாளராக சேர்ந்தார். அந்தப் படத்திலேயே அவருக்கு நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தனது அபாரமான நடிப்பில் முதல் படத்திலேயே அப்ளாஸை அள்ளிய அவர்; தொடர்ந்து புதிய வார்ப்புகள், கல்லுக்குள் ஈரம், சுவரில்லாத சித்திரங்கள், நிழல்கள், பாலைவன சோலை, மௌனராகம், மண்வாசனை, ஒரு கைதியின் டைரி என எக்கச்சக்க படங்களில் காமெடி ரோலையும், கேரக்டர் ரோலையும் ஏற்று கலக்கினார்.

பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா: ஜனகராஜை நினைத்தாலே மௌனராகம் படத்தில் வரும் 'பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா' காமெடி அனைவரது நினைவுகளிலும் தவறாமல் வந்துவிடும். மனைவியை பேருந்தில் அனுப்பிவிடும்போது பாவமாக முகத்தை வைத்துக்கொண்டும்; பேருந்து நகர்ந்த பிறகு சந்தோஷத்தில் ஓடிக்கொண்டே கத்துவதும் என அவரது மேனரிசங்கள், நடிப்பு, டயலாக் டெலிவிரி உள்ளிட்டவை எல்லாம் ரசிகர்களிடம் சூப்பராக ஒர்க் அவுட் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வார்த்தைதான் இருந்தாலும் மெர்சல்: 80களில் ஆரம்பித்த அவரது நடிப்பு பயணம் 90களிலும் ஃபுல் ஃபார்மில் சென்றது. ரஜினியுடன் அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட படங்களிலும் கமலுடன் நாயகன் உள்ளிட்ட படங்களிலும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார். முக்கியமாக அண்ணாமலை படத்தில் குஷ்பூவை குளியலறையில் பார்த்தது குறித்து ரஜினி சொல்கையில், 'ஹான்' என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு அந்த சீனை தனது தோளில் சுமந்து கெத்து காட்டியிருந்தார்.
சினிமாவிலிருந்து ஓய்வு: படு பிஸியாக நடித்துக்கொண்டிருந்த அவர் வயோதிகம் காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தார். கடைசியாக அவர் 96, ஒபாமா உங்களுக்காக உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் அவர் குறித்து பாடலாசிரியர் கண்ணதாசனின் மகனும், நடிகருமான அண்ணாதுரை தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "ஜனகராஜ் எப்போதுமே நார்மலாகத்தான் பேசுவார்.
ஜனகராஜுக்கு விபத்து: ஒருமுறை புதுச்சேரிக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். யாரோ ஒருவர் கல்லை காரில் அடித்துவிட்டார்கள். காரின் முன் இருக்கையில் ராபர்ட் ராஜசேகர், பின் இருக்கையில் ஜனகராஜ், கலை என்ற ஆர்ட் டைரக்டர் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தார்கள். கல்லின் சத்தத்தை கேட்டு ட்ரைவரோ, வண்டி ஏதோ கல்லில் ஏறிவிட்டதாக நினைத்து ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது ஜனகராஜின் சட்டையில் ஒரே ஈரம். விளக்கை போட்டு பார்த்தால் முழுக்க ரத்தம். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் அடிபட்டதால் அவருடைய வாய் கோணல் ஆகிவிட்டது. அப்போதே அவர் இறந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு சீரியஸாக இருந்தார். அந்த வாய் கோணல் கடவுள் அவருக்கு கொடுத்த பரிசு. அதற்கு பிறகுதான் அவரது காமெடி எங்கேயோ போய்விட்டது. ரஜினிகூட ஜனகராஜை குரு என்றுதான் அழைப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications
