சென்சாரில் இருக்கும் ஜனநாயகன் லீக் ஆனது எப்படி? TVK அரசியலாக்க கூடாது.. DMK போஸ் வெங்கட் பளிச்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவான படமான ஜன நாயகன் படம் இணையத்தில் லீக் ஆன காட்சிகள் மொத்த திரை உலகையும் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. இதற்கு முன்னர் எல்லாம் ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் லீக் ஆகும், அதுவே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். அல்லது சில நொடிகள் இடம் பெறும் காட்சி லீக் ஆகும், அல்லது படம் வெளியான பின்னர் இணையத்தில் பைரஸி பிரிண்ட் வெளியாகும். இவை எல்லாமே தண்டனைக்குரியது தான். ஆனால் இதுவரை வெளியாகாத ஒரு படம் முழுவதும் லீக் ஆகி உள்ளது பெரும் அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில், " ஜனநாயகன் திரைப்படம் முழுமையாக இன்டர்நெட்டில் வெளியானது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று, யார் இதனை செய்து இருந்தாலும் கடுமையான தண்டனை தர வேண்டும்.. சென்சாரில் இருக்கும் ஒரு திரைப்படம் எப்படி வெளியில் வர முடியும்.. ஒட்டுமொத்த திரையுலகமும் இதை கண்டிக்க வேண்டும்.. தவறு எங்கு நடந்தது என்பதை அறிந்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.. (இதையும் அரசியலாக்க முயற்சி செய்யக்கூடாது தவெக) " என்று பதிவிடுள்ளார்.

அதேபோல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர், கே ஆர் எனப்படும், கோதண்டராமைய்யா தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், வணக்கம், நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் சிக்கல்களால் இன்றுவரை தணிக்கை சான்றிதழ் பெற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட அந்த படம் பல்வேறு காரணங்களால் இன்றுவரை திரையிட முடியாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் படத்தின் வெளிநாட்டு உரிமை, ஏரியா விற்பனை, ஓடிடி உரிமை பெற்ற பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு பிறகாவது இப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி முதலீடு செய்த அனைவருக்கும் போட்ட பணத்தை எடுத்து தரும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மொத்த படமும்: இப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்று ஜனநாயகன் படத்தில் இருந்து ஐந்து நிமிடம் ஓடக்கூடிய சண்டைக் காட்சி மட்டும் இணையத்தில் லீக் ஆனதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பாக இருக்கும் என்று எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இன்று மொத்த படமும் தரமான ( HD QUALITY) பிரிண்டாக இணைய தளங்களில் வெளியாகி ருப்பதாகவும் அதை பல்லாயிரக்கணக்கானோர் டவுன்லோட் செய்து பார்த்துக் கொண்டிருப்பதாகவும் வரும் தகவல்கள் பேரிடியாக இருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் ஒரு திரைப்படத்தை முன்னணி நடிகர்களை வைத்து தயாரிப்பதும் ரிலீஸ் செய்வதும் அதில் முதலீடு செய்த பல நூறு கோடிகளை திருப்பி எடுப்பதும் சாதாரண விஷயம் அல்ல என்பது திரைப்படத்துறை சார்ந்த அனைவருக்கும் தெரியும். இது விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரசிகர்களை பொறுத்தவரை எந்த வடிவத்திலும் தேடித்தேடி பார்ப்பது அவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கலாம். ஆனால் அது முதலீடு செய்து தயாரிப்பாளருக்கு பெரும் திண்டாட்டமாக இருக்கும் என்பது யாருக்கும் புரிவதில்லை.
பேரிழப்பு: இந்த படத்தை பல மொழிகளில் ( PAN INDIA MOVIE ) வெளியிட திட்டமிட்டு இருந்தனர். இப்போது திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டிருப்பதால் ஒட்டு மொத்த திரைப்படத்துறைக்கும் பேரிழப்பு. சினிமாவுக்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்கும் பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள். சுனாமி கொரோனா போல பைரஸியும் திரைப்படத்துறைக்கு ஒரு பேரிடர் என்றால் மிகையாகாது.
தண்டனை: எனவே காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து இணையதளம் உள்ளிட்ட எந்த சோசியல் மீடியாவிலும் இந்த படத்தை யாரும் பகிர்ந்து விடாதபடி தடுக்க வேண்டும் என்றும், இந்தப் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றும் தமிழ் திரைப்படத்துறை சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நன்றி. இப்படிக்கு, கோதண்டராமைய்யா ( கே ஆர்) முன்னாள் தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை" என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











