இசை நிகழ்ச்சிகள் இல்லாம இவ்வளவு நாள் இருந்ததே இல்லை, ஆனா.. டிரம்ஸ் சிவமணி என்ன சொல்றார் பாருங்க?
மும்பை: இசை நிகழ்ச்சிகள் இல்லாமல் இத்தனை நாள் இருந்ததில்லை என்று டிரம்ஸ் சிவமணி தெரிவித்துள்ளார்.
பிரபல டிரம்ஸ் இசைக் கலைஞர் சிவமணி. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், சங்கர் மகாதேவன் உட்பட பல்வேறு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
தனியாகவும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார்.

இசை அமைப்பாளர்
இவர், ஆனந்த் ஷங்கர் இயக்கிய அரிமா நம்பி என்ற படம் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். இதில் விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் நடித்திருந்தனர். இதையடுத்து அதர்வா, கேத்தரின் தெரசா நடித்த கணிதன் படத்துக்கும் இசை அமைத்தார். இந்தப் படங்களில் அவரது இசை பேசப்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.

மனைவியின் சகோதரி
இவர், தனது மனைவி ரூனா ரிஸ்வியுடன் மும்பையில் வசித்து வருகிறார். சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் அவருக்கு இருந்த இசை நிகழ்ச்சிகள், கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து மும்பைக்கு திரும்பிய சிவமணி, சில காரணங்களால் அவர் மனைவியின் சகோதரி வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

இசை நிகழ்ச்சிகள்
அங்கிருந்த போதுதான் லாக்டவுன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர், தன்னுடன் இசை கருவிகள் ஏதும் கொண்டு செல்லவில்லை. இதனால், அவர் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஜாலியாக இசை அமைக்கிறார். இதுபற்றி கூறியுள்ள அவர், இசை நிகழ்ச்சிகள் இல்லாமலோ, இசைக் கருவிகளை வாசிக்காமலோ, இவ்வளவு நாள் நான் இருந்ததில்லை.

வெளியில் இருந்து
எனது தொழில் காரணமாக, நான் எப்போதும் பயணித்துக்கொண்டே இருப்பேன். இப்போது வீட்டில் இருக்கிறேன். அதற்காக, எனக்கு வருத்தம் இல்லை. குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்கிறேன். குழந்தைகளுடன் நடனமாடி மகிழ்கிறேன். ஆனால், வெளியில் இருந்து வரும் தகவல்கள் எனக்கு வருத்தத்தை தருகின்றன' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











