வெள்ளைத் தோலுக்கு ஆசைப்பட்டு பாம்பே நடிகைகளை அழைக்கும் ஹீரோக்கள்.. வெளுத்து வாங்கிய ஏவிஎம் குமரன்!
சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தயாரிப்பு நிறுவனமாக ஏவிஎம் உள்ள நிலையில், சமீப காலமாக பெரிய படங்களை தயாரிக்கப் போவதில்லை என்றே அந்த நிறுவனம் ஒதுங்கி விட்டது. சிவாஜி உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை தயாரித்த அந்த நிறுவனம் அதன் பின்னர் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க முடியாத சூழலுக்கு சென்று விட்டது.
முன்னணி நடிகர்கள் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கேட்பதால் பெரிய நஷ்டம் ஏற்படுவதாக கருதி பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் முடிவை கை விட்ட அந்த நிறுவனம் தயாரிப்பு பணிகளையே கை விட்டு விட்டது.

தென்னிந்திய ஹீரோயின்களை நடிக்க வைத்தால் கூட பரவாயில்லை. மொழியே தெரியாத வட இந்திய நடிகைகளை அழைத்து வந்து ஹீரோக்கள் செய்யும் அட்ராசிட்டிகள் குறித்து ஏவிஎம் குமரன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பகிரங்கமாக பேட்டியளித்து பல விஷயங்களை போட்டு உடைத்துள்ளார்.
திணறிய இந்தி நடிகர்கள்: எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படத்தை இந்தியில் ரீமேக் செய்த போது அந்த படத்தின் ஹீரோ "நான் ஆணையிட்டால்" பாடலில் தன்னால் நடிக்க முடியாது என அந்த பாடலே வேண்டாம் என்றார் என ஏவிஎம் குமரன் கூறியுள்ளார். உயர்ந்த மனிதன், பாபு போன்ற படங்களில் சிவாஜியின் நடிப்பை பார்த்து விட்டு அதை ரீமேக் செய்து நடிக்கவே இந்தி நடிகர்கள் பயந்தார்கள். பானுமதி அன்னை படத்தில் நடித்த நடிப்புக்கு அந்த படம் வெற்றிப் பெற்றது. அதே படத்தை இந்தியில் லாட்லா என எடுத்தார்கள். நிரூபா ராய் நடித்த நடிப்பை பார்த்து விட்டு இது லாட்லா இல்லை டால்டா படம் என ரசிகர்கள் திட்டிவிட்டு சென்றார்கள். இந்தி நடிகர்களால் எம்ஜிஆர், சிவாஜி, நாகேஷ் போன்றெல்லாம் நடிக்கவே முடியாது எனக் கூறியுள்ளார்.
வெள்ளை தோலுக்கு ஆசைப்பட்டு: ஆனால், சமீப காலமாக நடிகர்கள் எந்த படத்தில் நடிக்கிறாங்க, இயக்குநர்கள் என்ன கதையை இயக்குறாங்க என்பதே தெரியவில்லை. ஒரு படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கேயோ ஆரம்பித்து கதை எங்கேயோ போகிறது. வெள்ளை தோலுக்கு ஆசைப்பட்டு ஹீரோக்கள் பாம்பே ஹீரோயின்களை கேட்கின்றனர். அவர்களுக்கு நடிக்கவும் தெரியவில்லை, மொழியும் புரியவில்லை. டப்பிங் ஆர்டிஸ்ட் தான் அவர்களின் நடிப்புக்கு தங்கள் குரல் மூலம் உயிர் கொடுக்க முயல்கின்றனர் என ஏவிஎம் குமரன் பேசியுள்ளார்.
அதிக சம்பளம் ஆபத்து: மலையாள படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி, 200 கோடி வசூல் செய்தால் அதுதான் சினிமா வியாபாரம். படத்தின் பட்ஜெட்டே 200 கோடி, 300 கோடி வசூல் 100 கோடியை கூட தாண்டாமல் இருப்பது எந்த மாதிரியான பிசினஸ் என்றே புரியவில்லை. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்து படங்களை தயாரித்தாலும் அவர்களும் ஒரு கட்டத்துக்கு மேல் இதனால் கஷ்டப்படப்போவது நிச்சயம் எனக் கூறியுள்ளார். அந்த காலத்திலும் சில படங்களை எடுத்து ஏவிஎம் நிறுவனம் தோல்வியை சந்தித்துள்ளது. மூன்று மொழிகளில் எடுக்கப்பட்ட பெண் படம் மூன்று மொழிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இங்கே எந்த காட்சியை ரசிகர்கள் விரும்பவில்லையோ அதே காட்சியை மற்ற மொழி ரசிகர்களும் விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். தேவையில்லாமல் ரஷ்யாவுக்கு சென்று பாடல் எடுத்து வந்தார்கள். அந்த பாட்டு பிடிக்காமல் ரசிகர்கள் தம் அடிக்க வெளியே போயிடுறாங்க, அதன் பின்னர் எதுக்கு அந்த தண்டச் செலவு என தயாரிப்பாளர் ஏவிஎம் குமரன் தமிழ் சினிமாவின் நிலைமையை விரிவாக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











