அப்பாவை பழி வாங்கிய லோகேஷ் கனகராஜ்... எப்படி ஏன் என்ற சுவாரஸ்ய தகவல் தெரியுமா?
சென்னை: விக்ரம் திரைப்பட வெற்றிக்குப் பிற இயக்குநர் லோகேஷிற்கு இந்திய அளவில் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மேடையில் வைத்தே லோகேஷ் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை என்று கூறினார்.
Recommended Video
இந்தி மற்றுமின்றி, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பெயர் வாங்கிவிட்டார். அதற்கு காரணம் கமல் ஹாசன் அவரை அனைத்து மொழி திரைப்பட நடிகர்களிடமும் நேரில் அழைத்துச் சென்று படத்தை புரமோட் செய்ததாக கூட இருக்கலாம்.
இதனால் விஜய்யை வைத்து அவர் அடுத்து இயக்கவுள்ள திரைப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு எகிறிக் கொண்டே போகிறது.

லோகேஷ்
யாரிடமும் துணை இயக்குநராக வேலை செய்யாமல் மாநகரம் திரைப்படத்தை எடுத்து, பின்னர் கைதி திரைப்படம் மூலம் நடிகர் விஜய்யின் கவனத்தை ஈர்த்து, மாஸ்டர் என்கிற வெற்றிப் படத்தை கொடுத்து, இப்போது, தான் சினிமாவிற்கு வந்த காரணகர்த்தாவான கமல் ஹாசனையும் வைத்து இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துவிட்டார். "யாருயா நீ? ஷார்ட் ஃபிலிம் எடுக்கல, அசிஸ்டண்ட்டா வேல செய்யல, பேங்க் வேலைல இருந்த நீ, திடீர்னு எப்டியா டைரக்டர் ஆன?" என்று நடிகர் விஜய் பிரம்மிக்கும் வகையில் லோகேஷின் வளர்ச்சி இருக்கிறது.

சம்பளம்
லோகேஷ் எடுத்த நான்கு படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ரிசல்ட்டை கொடுத்துள்ளது. விக்ரம் திரைப்படத்திற்கு அவர் 8 கோடிகள் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இப்போது இந்தியா முழுக்க தெரிந்த இயக்குநர் ஆகிவிட்டதால், அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் பட்டியலில் லோகேஷ் இடம்பெறுவார்.

லோகேஷ் கனகராஜ்
சிறு வயதிலிருந்தே லோகேஷ் என்கிற பெயரை மட்டும்தான் பயன்படுத்தி வந்ததாகவும், சினிமாவில்தான் லோகேஷ் கனகராஜ் என்று வைத்துக் கொண்டதாகவும் அதற்குப் பின்னால் காரணம் இருக்கிறதென்றும் சொல்லியிருக்கிறார். தான் எப்போதுமே சரியாக படிக்காமல் சினிமா சினிமா என்று அதன் மீதே மோகமாக இருந்ததாகவும், அப்போதெல்லாம் நீ சினிமாவிலேயே மூழ்கி சாகப் போகிறாய் என்று தன் அப்பா தனக்கு சாபம் விடுவாரென்றும், அதற்காகத்தான் சினிமாவில் அவரது பெயரையும் சேர்த்து போடுவதாக கூறியுள்ளார். "உன்ன அவன் ஸ்வீட்டா பழி வாங்குறாம்பா" என்று தன் தம்பி தனது அப்பாவிடம் சொல்லியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

லைன் அப்
விக்ரமை தொடர்ந்து விஜய் படம், விக்ரம் மூன்றாம் பாகம், கைதி இரண்டாம் பாகம், இரும்புக்கை மாயாவி என்று பல படங்களை கையில் வைத்திருக்கிறார் லோகேஷ். இரும்புக்கை மாயாவி ஒரு சூப்பர் ஹீரோ படம் என்றும் அதில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் அது லோகேஷின் கனவுப் படம் என்று மட்டும் தெரியும்.


Click it and Unblock the Notifications











