'என் மகள் ஒரு நாள் நாம் என்ன மதம்? என்று கேட்டாள்...' நடிகர் ஷாருக் கானின் நெகிழ்ச்சி பேச்சு
மும்பை: டிவியில் குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் பேசியது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 1950 ஜனவரி 26 ஆம் தேதி, நாட்டின் குடியரசுத் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இன்று குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரேசில் அதிபர்
டெல்லியில் நடந்த விழாவில் தேசிய கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்தார். விழாவில் தலைமை விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ பங்கேற்றுள்ளார். ராஜபாதை முதல் செங்கோட்டை வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நாட்டின் வலிமையை பறைசாற்றும் விதமாக முப்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பு நடந்து வருகிறது.

ஷாருக் கான்
இதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டு பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் குடியரசு தின விழாவுக்காக, டிவி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, தனது வீட்டில் மதம் பற்றி ஒரு போதும் பேசியது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு மதம் இல்லை
அவர் கூறும்போது, நான் முஸ்லிம், என் மனைவி இந்து, எங்கள் குழந்தைகள் இந்தியன். எங்கள் வீட்டில் மதம் பற்றி பேசுவதில்லை. என் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றபோது மதம் பற்றி எழுதச் சொன்னார்கள். என் மகள் ஒரு நாள் வந்து, நம் மதம் என்ன? என்று கேட்டாள். நான் அவளது விண்ணப்பத்தில் எழுதினேன், நாங்கள் இந்தியன். எங்களுக்கு மதம் இல்லை என்று' எனத் தெரிவித்தார்.

அடுத்த படம்
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாருக்கானின் இந்தப் பேச்சு ரசிகர்களிடையே பலத்த பாராட்டையும் பெற்று வருகிறது. ஷாரூக் கான் நடித்த ஸீரோ படம் தோல்வியை தழுவியதை அடுத்து அடுத்த படம் பற்றி இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார் ஷாரூக்கான். அவர் நடிக்கும் படத்தை அட்லி இயக்குவதாகக் கூறப்பட்டது.


Click it and Unblock the Notifications











