'நான் நல்லாருக்கேன்'... திருவண்ணாமலையில் இளையராஜா கிரிவலம்- அண்ணாமலையார் தரிசனம்!
திருவண்ணாமலை: இசைஞானி இளையராஜா மருத்துவ சிகிச்சைக்கு பின் முதல்முறையாக திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு கிரிவலம் வந்தார்.
இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23 ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
மலேசிய நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது உடல் நிலை பாதிக்கப்படவே உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இளையராஜாவுக்கு மருத்துவர்கள் உடனடியாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்தனர். அதன்பின் சில நாட்கள் கழித்து உடல் நலம் பெற்று வீடு திரும்பினார். திரைப்படத்திற்கு இசையமைக்கும் பணியிலும் ஈடுபட்டார்.

திருவண்ணாமலையில் இசைஞானி
இந்நிலையில், வியாழக்கிழமையன்று காலை திருவண்ணாமலைக்கு வந்த இளையராஜா, அங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

நலமுடன் இருக்கிறேன்
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கூறியதாவது. இப்போது நான் நலமுடன் உள்ளேன். ''நான் அண்ணாமலையார் கோயிலுக்கு அடிக்கடி வருபவன். புத்தாண்டுக்கு தவறாமல் இங்கு வந்து சாமி தரிசனம் மேற்கொண்டு கிரிவலம் வருவது வழக்கம்.

திருவண்ணாமலை கிரிவலம்
இந்த புத்தாண்டு அன்று வரமுடியாமல்போனதால் இன்று கிரிவலம் வர வந்துள்ளேன். நான் அமிதாபச்சன் நடிக்கும் படம் ஒன்றுக்கு இசை அமைக்க உள்ளதால் கிரிவலம் சென்றுவிட்டு சென்னை திரும்ப உள்ளேன்" என்றார்.

ரசிகர்கள் திரண்டனர்
மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் இளையராஜா முதன்முறையாக திருவண்ணாமலை சென்றதால் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications











