போதைப் பொருள் விவகாரம்.. போலீஸ் வலையில் மேலும் ஒரு முன்னணி நடிகை.. நண்பர் கைது ஆனதால் பரபரப்பு!
பெங்களூரு: போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை ராகிணியை அடுத்து மேலும் ஒரு நடிகையும் போலீஸ் வலையில் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த டிவி நடிகை அனிகா உள்பட 3 பேர் கடந்த மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

போதை மாத்திரை
திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா போதை மாத்திரைகளை விற்று வந்துள்ளார். இந்நிலையில், கன்னட சினிமாவில் நடக்கும் பார்ட்டிகளின் போது போதைப் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இளம் நடிகர், நடிகைகள் அதைப் பயன்படுத்துவதாகக் கூறிய அவர் அதைப் பயன்படுத்தும் 15 நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலையும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

ராகிணி திவிவேதி
இந்த விவகாரத்தில் ரவிசங்கர் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். இவர் ஜெயநகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரிடம் நடத்திய விசாரணையில் நடிகை ராகிணி திவிவேதியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதனால் இந்த ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர்.

அதிரடி கைது
ஆனால் அவர் ஆஜராகவில்லை. 'விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. எனது வழக்கறிஞர் போலீசாரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். திங்கட்கிழமை ஆஜராவேன்' என்று ராகிணி கூறி இருந்தார். ஆனால், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் அவர் வீட்டில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.

சஞ்சனா கல்ராணி
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் மற்றொரு கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணியின் நண்பர் தொழிலதிபர் ராகுல் என்பவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சஞ்சனா, நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி. சஞ்சனாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

தாவூத் இப்ராஹிம் இல்லை
ஆனால், இதை மறுத்துள்ள சஞ்சனா, போலீஸ் அழைத்தால் விசாரணைக்கு ஆஜராவேன் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ராகுல் எனது ராக்கி நண்பர். அவருக்கும் போதை பொருள் விவகாரத்துக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்காது. இந்த விஷயத்தில் தேவையில்லாமல் என் பெயரும் இழுக்கப்படுகிறது. தப்பிச் செல்ல நான் ஒன்றும் தாவூத் இப்ராஹிமோ ஓசாமாவோ அல்ல என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











