தலைவன் இருக்கின்றான் படத்தில் நான் இல்லை.. போட்டுடைத்த நடிகர் விஜய் சேதுபதி!
சென்னை: தலைவன் இருக்கின்றான் படத்தில் தான் நடிக்கவில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி இதுவரை நடிகர் கமலுடன் சேர்ந்து நடிக்கவில்லை.
இதனால் கமல் 60 நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி இந்தியன் 2 படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை சில காரணங்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்று கமலிடம் வாய்ப்பு கேட்டார்.

தலைவன் இருக்கின்றான்
இதனை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதி நாசரின் மகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

தவறவிட்டேன்
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் விஜய் சேதுபதி, தற்போது வரை கமலுடன் தான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, "நான் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருந்தேன், ஆனால் தேதிகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக நான் அதைத் தவறவிட்டேன்,

வெறித்தனமாக விரும்புகிறேன்
இப்போது வரை நான் அவருடன் எந்தப் படமும் நடிக்கவில்லை, ஆனால் அவருடன் நடிக்க வேண்டும் என்று நான் வெறித்தனமாக விரும்புகிறேன், அது படத்தில் ஒன்று அல்லது இரண்டு காட்சிகள் என்றாலும் கூட பரவாயில்லை.

நான் நம்புகிறேன்
அது எப்போதாவதோ அல்லது மற்றொரு படத்திலோ நடக்கும் என்று நான் நம்புகிறேன். நாம் உண்மையிலேயே ஏதாவது ஒன்றை விரும்பினால், அது எப்படியாவது நடக்கும் என்று நான் நம்புகிறேன்.. இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

19 ஆண்டுகளுக்கு பிறகு
தலைவன் இருக்கின்றான் படத்தை லைகா புரடெக்ஷன் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். தெனாலி படத்திற்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து தலைவன் இருக்கின்றான் படத்தின் மூலம் ஏஆர் ரஹ்மானும் கமல்ஹாசனும் இந்த படத்தின் மூலம் இணையவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











