அபார வெற்றி பெற்ற ‘கபாலி’... 2ம் பாகம் எடுக்க பிளான் பண்ணும் தாணு, ரஞ்சித்... விரைவில் அறிவிப்பு?
சென்னை: ரஜினியின் கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகிறார்களாம் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவும், இயக்குநர் ரஞ்சித்தும்.
கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது கபாலி படம். லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
ரஜினி படம் என்பதால் டிரைய்லர் முதல் டிக்கெட் விற்பனை வரை அனைத்திலும் சாதனை படைத்தது கபாலி.

கபாலி மயம்...
இப்பட ரிலீசை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடினர். எங்கெங்கு காணினும் கபாலி மயமாகத் தான் இருக்கிறது கடந்த சில நாட்களாக.

2ம் பாகம்...
இந்நிலையில், கபாலி படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகிறாராம் தாணு. இதனை ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்வம்...
அப்பேட்டியில் அவர், "கபாலி படத்தின் கிளைமாக்ஸை நாங்கள் தொடரும் விதத்திலேயே முடித்துள்ளோம். எனவே, விரைவில் அதன் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என நானும், இயக்குநர் ரஞ்சித்தும் ஆர்வமாக இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் சம்மதம்...
மேலும், ரஜினி மட்டும் ஓகே சொல்லி விட்டால், இரண்டாம் பாகத்திற்கான வேலைகளைத் துவக்கி விடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். இத்திரைப்படத்தில் பணியாற்ற எல்லோரையும் மீண்டும் ஒன்றிணைக்க இருப்பதாகவும் அவர் அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சித்...
இதே தகவலை இயக்குநர் ரஞ்சித்தும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர், "கபாலி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை புரிந்துள்ளது. எனவே, அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுக்க இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

2.0...
தற்போது ரஜினி ஷங்கரின் இயக்கத்தில் எந்திரனின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் எனக் கூறப்படுகிறது. எனவே, இந்தப் படத்தை முடித்து விட்டு ரஜினி மீண்டும் கபாலி இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











