சம்பளம்கூட வேண்டாம்.. ‘ஷில்பா’ மட்டும் தான் வேணும்.. இயக்குநரிடம் கெஞ்சியதாகக் கூறிய விஜய் சேதுபதி!
சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த முதல் காட்சியில் 50, 60 டேக் வாங்கியதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஷில்பா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இயக்குனரிடம் கெஞ்சியதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிலிம் கம்பானியன் இணையதளம் சமீபத்தில் நடத்தியது. இதில் விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா, ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், ஆயுஷ்மான் குரானா, பார்வதி திருவொத்து, மனோஜ் பாஜ்பாய் என எட்டு பேர் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் போது, ஒவ்வொரு நடிகர்களிடமும் சினிமா பற்றிய அவர்களது பார்வை குறித்து விவாதிக்கப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதியிடம் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த அனுபவம் பற்றி கேட்கப்பட்டது.

சூப்பர் டீலக்ஸ் அனுபவம்
அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, " சூப்பர் டீலக்ஸ் படத்தின் கதையை கேட்ட உடனேயே எனக்கு பிடித்துவிட்டது. ஷில்பா கதாபாத்திரத்தில் நடித்தே ஆகவேண்டும் என முடிவு செய்து இயக்குனரிடம் கெஞ்சினேன். சம்பளம் கூட வேண்டாம் எனக் கூறி அந்த பாத்திரத்தை எனக்கு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

அதிக டேக்ஸ்
முதல் நாள் படப்பிடிப்பில், முதல் காட்சியில் நடித்த போது 50, 60 டேக்குகள் வாங்கினேன். இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் திருப்தி ஆகவே இல்லை. அதன் பிறகு தான் எனக்குள் இருக்கும் பெண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்து, எந்த ரெபரன்சும் இல்லாமல் நடித்தேன். எனக்கு திருப்தி அளிக்கும் வரை, எத்தனை டேக்கானாலும் கவலைப்படாமல் நடித்தேன். கலை தான் முக்கியம். எனவே நான் எந்த நடிகருடனும் போட்டி போட்டு நடிக்கவில்லை", எனக் கூறினார்.

ராசுகுட்டிக்கு ரன்வீர் பாராட்டு
அப்போது குறிக்கிட்ட ரன்வீர் சிங், சூப்பர் டீலக்ஸ் படத்தின் ராசுக்குட்டி கதாபாத்திரத்தை புகழ்ந்து தள்ளினார். விஜய் சேதுபதியும், ராசுக்குட்டியும் நடித்த காட்சிகள் மிக அருமையாக இருந்ததாக அவர் பாராட்டினார்.

அசர வைத்த சிறுவன்
அதற்கு பதிலளிக்கையில், " இயக்குனர் குராமராஜா எப்போதும் ஒன்மோர் கேட்டுக்கொண்டே இருப்பார். அந்த சிறுவனும் சளைக்காமல் நடிப்பான். சிறுவர்களுக்குள் நடக்கும் ஒரு சண்டைக்காட்சியில் படமாக்கப்பட்டபோது, அதில் முதல் டேக்கில் நடித்துவிட்டு, மீண்டும் ஒன்மோர் போகலாம் எனக்கூறி அனைவரையும் அந்த சிறுவன் அசர வைத்தான்", என விஜய் சேதுபதி கூறினார்.

சமூக வலைதளங்களில் இயங்க நேரமில்லை
மேலும், " நான் படங்களில் நடிக்கும் போது எல்லோரையும் சவுகரியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பேன். ஹீரோ வருகிறார் என நினைத்து யாரும் பயப்படக்கூடாது. அதேபோல் எனக்கு சமூக வலைதளங்களில் இயங்க நேரம் கிடையாது. ஏதாவது பதிவிட வேண்டும் என்றால், எனது அட்மினிடம் கூறி பதிவிடுவேன். கமெண்ட்ஸ் எல்லாம் பார்க்க மாட்டேன்.

இந்தி படங்கள்
இந்தி சினிமாவில் அதிகம் நடிக்காததற்கு காரணம் மொழி தான். மேலும் இந்தி கலாச்சாரம் பற்றியும் எனக்கு அதிகம் தெரியாது. இந்தி படங்களையும் நான் அதிகம் பார்ப்பதில்லை. ஒரு மொழி படத்தில் நடிப்பதற்கு, அந்த கலாச்சாரத்தை பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

தென்னிந்திய கலாச்சாரம்
ஒரு மொழியை சுலபமாக கற்றுக்கொள்ளலாம். ஒரு ஆறு மாதம் சவுதியில் வேலை பார்த்தால், அரபு மொழியை கற்றுக்கொள்ளலாம். ஆனால் கலாச்சாரத்தை பற்றி தெரிந்துகொள்ள முடியாது. எனவே எனக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழி படங்களில் நடிப்பது ஈஸியாக இருக்கிறது", என விஜய் சேதுபதி கூறினார்.


Click it and Unblock the Notifications











