இதுதான் நாகரீகமா..? தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர்கள் குழுவுக்கு எதிர்ப்பு..பாரதிராஜா ஆவேசம்!
சென்னை: சினிமா பிரச்னைகளை தீர்க்க ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவுக்கு, திடீரென எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கொரானா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடக்க இருந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் சார்பில் ஓர் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

ஒருங்கிணைந்து
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அனுப்பச் சொன்னதாக அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் நமது சங்கத்திற்கு தேர்தல் தள்ளிப்போகக்கூடிய சூழ்நிலை உள்ளதால் இந்த நேரத்தை வீணாக்காமல் நல்ல விஷயங்களை பேசி தீர்வு காண்பதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைவரும் ஓர் அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டு தீர்வு கண்டு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

நிம்மதியாக செயல்பட
நமது உறுப்பினர்கள் திரைத்துறை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை அரசாங்கத்திடமும் மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பைனான்சியர்கள் கலந்து பேசி திரைத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பை சரிசெய்து தமிழ் திரைத்துறையும் தயாரிப்பாளர்களும் நிம்மதியாக செயல்பட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

எஸ் ஏ சந்திரசேகர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களாகிய பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், எஸ் தாணு, கேயார், டிஜி தியாகராஜன், முரளிதரன் இவர்களுடன் அனுபவம் வாய்ந்த 36 தயாரிப்பாளர்கள் அடங்கிய 42 பேர் கொண்ட குழு, சினிமாவில் உள்ள மற்ற துறையினருடன் கலந்து பேசி நல்லதொரு விடியலை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தி தருவார்கள். ' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

பாரதிராஜா எதிர்ப்பு
இதில் டி. சிவா, ௮ன்பு செழியன், ஐசரி கணேஷ், கமீலா நாசர், கதிரேசன், எடிட்டர் மோகன், ராதாகிருஷ்ணன், முரளி ராம நாராயணன், சிவசக்தி பாண்டியன் உட்பட பலர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இதற்கு பாரதிராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேனியில் இருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏற்க முடியாதது
நாகரீகம் என்பது பெயரைப் பயன்படுத்தும் முன் அனுமதி கேட்பது. ஆனால் நான் அறியாமல் எனது பெயரைப் பயன்படுத்தியது சரியல்ல. தேர்தல் தள்ளிப் போடப்பட்ட நிலையில் பொதுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவை தெரிந்துகொள்ளாமல் சுயமாக ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்கள் திரையுலகின் பிரச்னையைத் தீர்ப்பார்கள் என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தவறான அணுகுமுறை
அதிலும் என் பெயரை என்னைக் கேட்காமல் பயன்படுத்தியது முற்றிலும் தவறான அணுகுமுறை. எனது பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இதையடுத்து பழனிவேல், ராதாகிருஷ்ணன், டி.சிவா உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











