பணத்தேவையை எதிர்பார்த்து சினிமாவுக்கு வரவில்லை - கோடீஸ்வரி கே.ஆர்.விஜயா
சென்னை: கோடீஸ்வரியாக இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் கே. ஆர் விஜயா. ன் இந்த சினிமாத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பணத்தேவையை எதிர்பார்த்து சினிமாவில் நடிக்கும் நிலை எனக்கு வரவில்லை என்று பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா தெரிவித்துள்ளார்.
புன்னகை அரசி என்று திரையுலகில் அன்போடு அழைக்கப்படும் நடிகை கே.ஆர். விஜயா 1963ஆம் ஆண்டில் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான கற்பகம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சேர்த்து 400 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.

சரோஜா தேவி, வெண்ணிற ஆடை நிர்மலா, சௌகார் ஜானகி போன்ற அப்போது இருந்த முன்னணி நடிகைகளில் மிக முக்கியமானவர் மற்றும் பல வெற்றி படங்களில் நடித்தவர் கே.ஆர்.விஜயா. கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் என எந்த பக்தி படங்கள் எடுத்தாலும் அதில் நிச்சயம் இவரும் இருப்பார். இவ்விரு படங்களிலும் இவர் தனி முத்திரை பதித்திருப்பார்.

திரைப்படங்களில் நடித்தாலும், அவ்வப்போது சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இடையில் சில காலம் உடல் நிலை ஒத்துழைக்காததால் படங்களில் நடிப்பதை கூடுமானவரை தவிர்த்து சினிமா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
திரையுலகில் கே.ஆர்.விஜயாவின் பங்களிப்பையும், சாதனையை போற்றும் விதமாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நடன கலைஞர் மற்றும் நடிகையுமான ராஜசுலோச்சனாவின் 85வது பிறந்தநாள் விழாவை அவரது மகள் தேவி கிருஷ்ணா ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் கே.ஆர்.விஜயாவுக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஸ்பாட்லைட் சார்பில் வழங்கப்பட்டது. இதில் சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, ராஜஸ்ரீ, சலீமா, பிரபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிலையில் சிலகாலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்திருந்தவர் தற்போது ஸ்ரீ ஆண்டான் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் கோடீஸ்வரி என்ற படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாய் இளவரசன்.

மீண்டும் படத்தில் நடிப்பது குறித்து கேட்டதற்கு, நான் இந்த சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பணத்தேவையை எதிர்பார்த்து ஒருபோதும் சினிமாவில் நடிக்கும் நிலைமை எனக்கு வரவில்லை, என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











